ஒரு வாரம் கடந்து சென்றது. மருத்துவமனையில் இருந்த மாயா மற்றும் ஆர்யனின் அப்பா மற்றும் அம்மாவின் உடல் நிலையில் நிறையே முன்னேற்றம் இருந்தது.
நரேன் மற்றும் விவானின் அர்ப்பணிப்பான கவனிப்பின் கீழ், மாயாவின் உடல்நிலை குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியது நாளுக்கு நாள், அவர்களின் அன்பு மற்றும் ஆதரவால் அவள் உடல் மற்றும் மனதளவில் வலுவடைந்தாள். இறுதியாக, மருத்துவர் மாயாவை வீட்டுக்கு அழைத்து செல்ல ஒப்புக்கொண்டார். அதை கேட்டதும் விவான் மற்றும் நரேன் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
மாயாவை வீட்டுக்கு அழைத்து செல்ல எல்லா ஏற்பாடும் செய்திருந்த நாள் அன்று விவானின் பெற்றோர் மருத்துவமனையை அடைந்து அவள் உடல் நிலை குறித்து விசாரித்தனர். அது மட்டும் இல்லாமல் அவர்கள் மாயாவை சந்தித்து முழு மனதுடன் அவளை ஏற்றுக் கொண்டு அவளை அணைத்துக் கொண்டனர்.
மேலும் தற்போது டிசி ரெசிடென்ஸில் நரேன் மட்டுமே தனித்து இருந்ததால் விவானை, தன்னுடன் தங்க அனுமதிக்குமாறு விவானின் பெற்றோரிடம் நரேன் வலியுறுத்தினான். தந்தையின் இறப்புக்கு பிறகு நரேன் தனிமையில் இருப்பதை புரிந்து கொண்டு விவானின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் அவன் கோரிக்கையை ஏற்று சம்மதித்தனர். நரேன் அவர்களுக்கு நன்றி சொல்லி, மாயா மற்றும் விவானை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்றான். அந்த நாள் அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு புதிய தொடக்கமாக இருந்தது.
வீட்டில், அவர்கள் மூவரும் லிவிங் அறையில் அமர்ந்திருந்த போது, “மாயா, நீ பூரணமா குணமடைஞ்ச அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் பிரம்மாண்டமா ஒரு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணிடலாம் “ என்று நரேன் கூறினான். அதற்கு மாயா உடனே அவனிடம், “ சரி அண்ணா “ என்று சொல்லி அவனை பார்த்து புன்னகைத்தாள். பின்னர் விவானை பார்த்து, “ விவான் உனக்கு இதுல சம்மதமா ? “ என்று கேட்டாள்.
“டபுள் ஓகே” என்று விவான் புன்னகையுடன் சொன்ன அதே நேரம் பவித்ரா கதவைத் தட்டி உள்ளே நுழைந்ததும் அவர்களின் சிரிப்பு மறைந்தது. மாயா குழப்பத்துடன் அவளை பார்த்து, “ இவங்க யாரு ? “ என்று கேட்டாள்.
நரேன் தயங்கித் தயங்கி, ” இவங்க பவித்ரா, என்… என்னோட.. என்னோட ” என்று சொல்ல தயங்கினான். அவன் சொல்ல தயங்குவதை பார்த்து புரிந்து கொண்ட மாயைவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. ” ஒஹ், என் வருங்கால அண்ணி, சரி தானே ? “ என்று குறும்பு சிரிப்புடன் கேட்டாள்.
“ஆமா “ என்று நரேன் புன்னகையுடன் அதை உறுதிப்படுத்தி, “ வா பவி.” என்று அவளை அழைத்தான்.
பவித்ரா நரேனின் அருகில் அமர்ந்து, மாயாவை பார்த்து, “ எப்படி இருக்க மாயா?” என்று கனிவுடன் கேட்டாள். “நான் நல்லா இருக்கேன் அண்ணி” என்றாள் மாயா பணிவாக. அதை கேட்டதும், ” என்ன பவி சொல்லி கூப்பிடு மாயா, எனக்கு கிட்டத்தட்ட உன் வயசு தான் அதனால ஃபார்மாலிட்டி எல்லாம் வேணாம் ” என்று சிரித்தாள் பவித்ரா.
மாயா சரி என்று தலை அசைத்து, “ சரி, நீங்க ரெண்டு பேரும் எங்க சந்திச்சீங்க ? “ என்று கேட்டாள்.
அவள் கேள்வியால் என்ன சொல்வது என்று புரியாமல் நரேன் பதற்றமாக இருப்பதைப் பார்த்த பவித்ரா பதில் சொல்ல முன் வந்தாள்.
“ உண்மைய சொல்லனும்னா உனக்கு நடந்த ஆக்ஸிடென்ட்ல உன்னோட இன்னொரு அண்ணன் ஒருத்தர நீ மறந்துட்ட போல. நான் அவர் கிட்ட தான் வேலை செய்றேன். அது மட்டும் இல்ல நீயும் அவர் கூட பிசினஸ் பார்ட்னரா இருந்த ஆனா அந்த பிசினஸ்ல பெரிய நஷ்டம் ஏற்பட்டு அந்த பார்ட்னர்ஷிப் ரத்து பண்ண வேண்டியதா போச்சு “ என்று பவித்ரா சொன்னதும். அவள் வார்த்தையை கேட்டு மாயா ஆச்சரியத்தில் கண் சிமிட்டினாள். ” எனக்கு இன்னொரு அண்ணா இருக்காரா ? அய்யோ கடவுளே, நான் இன்னும் என்னலாம் மறந்தேன், இன்னும் எத்தன பேர் ஞாபகத்துல இல்லாம இருக்காங்க “ என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.
“ அவர் பேரு ஆர்யன், நான் ஏ.ஆர்.சி.யில நிதிக் குழுத் தலைவரா வேலை செய்றேன்.” என்று பவித்ரா பணிவுடன் கூறினாள்.
பவித்ரா சொன்ன பெயரை கேட்டதும், மாயாவின் கண்கள் ஒளிர்ந்தன. “ஆமா, எனக்கு ஞாபகம் இருக்கு, விஷ்ணு அங்கிள் மகன் தானே ? இப்போ எப்படி இருக்காரு ? “ என்று உடனே கேட்டாள்.
“அவன் நிறைய நேரம் ஹாஸ்பிடல்ல என் கூட தான் இருந்தான் மாயா ஆனா அவன் மனைவி மனைவி கர்ப்பமா இருக்கா அதனால அவனால இப்போ உடனே வர முடியல “ என்று நரேன் சொல்ல, ” ஆமா, ஆனா அவர் சீக்கிரமே மனைவியோட இங்க உன்ன பார்க்க வருவாரு “ என்று பவித்ரா மேலும் கூறினாள்.
“அப்போ… அவருக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? ஆஹா, நல்லவேள என்னோட ஒரு அண்ணனோட கல்யாணத்த என்னால பார்க்க முடியும் “ என்று சொல்லி மாயா முகம் மலர்ந்தாள். அதன் பின்னர், “ எனக்கு அவர் முகம் கூட ஞாபகம் இல்ல, அவர் வரட்டும் “ என்று கூறினாள். உடனே நரேன் அவளை பார்த்து, “ சீக்கிரம் வருவான் மாயா” என்று சொன்னான்.
சரி என்று தலை அசைத்த மாயா பினனர் நரேன் மற்றும் பவித்ராவை பார்த்து, “ சரி, நீங்க ரெண்டு பேரும் எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?” என்று கேட்டாள்.
பவித்ரா புன்னகையுடன், ” முதல்ல உன்னோட கல்யாணம் நடத்துவோம் அதுக்கு அப்புறம் எங்க கல்யாணம் பத்தி யோசிப்போம் “ என்று சொன்னாள்.
“ஆமா மாயா, நீ முதல்ல குணமாகனும் அதுக்கு அப்புறம் உன் கல்யாணம். அதனால எங்க கல்யாணத்த பத்தி இப்போ பேச வேணாம் “ என்று நரேனும் கூறினான்.
“சரி… உங்க இஷ்டம்.” என்று மாயா தலையசைத்தாள்.
அவள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லி விவான் மாயாவை ஓய்வெடுக்க அவளது அறைக்கு அழைத்துச் சென்று அவளருகிலேயே இருந்தான்.
இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்த ஆர்யனின் பெற்றோர் படிப்படியாக மருத்துவம் மற்றும் பிசியோதெரபி மூலம் வலிமை பெற்றனர். சிகிச்சையால் அவர்களின் பேச்சு மேம்பட்டது. சஞ்சு அவர்களை அடிக்கடி சந்திக்க சென்றாள் ஆனால் தேவிகா அவளை கர்ப்ப காலத்தில் அதிக சிரமம் கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்று சொல்லி அவளை வர வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆர்யன் அவர்களின் கவனிப்பில் தன்னை அர்ப்பணித்தான் அதே சமயம் தனது சஞ்சுவையும் அக்கறையோடு பார்த்துக் கொண்டான்.
விஷ்ணுவும், தேவிகாவும் ஆர்யனை அவர்கள் குணமடையும் வரை சஞ்சுவுடன் தங்குமாறு வலியுறுத்தினர். ஆர்யன் கிளம்ப வேண்டியிருந்த போது, ரஞ்சித் மருத்துவமனையில் தங்கி ஆர்யனைப் போலவே அவர்களை அன்புடன் கவனித்துக்கொண்டான்.
இரவில் சஞ்சுவின் சோர்வான தசைகளுக்கு இதமளிக்க ஆர்யன் வெதுவெதுப்பான குளியல் செய்ய உதவினான். அது மட்டும் இல்லாமல் அவளின் வீங்கிய கணுக்கால்களை மசாஜ் செய்து அன்பாக, ஆதரவாக பார்த்துக் கொண்டான்.
அவர்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து, ஆர்யனின் பெற்றோரும் திரும்பிவிட்ட நிலையில், இன்னும் சில மாதங்களில் அவர்களின் குழந்தையும் பிறந்து அவர்களின் கைகளில் இருக்கும் என்று சஞ்சு மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.
நாட்கள் செல்லச் செல்ல, ஆர்யனின் பெற்றோர் மேலும் பேசும் திறனைப் பெற்றனர். அதோடு அவர்கள் வீட்டிற்குச் செல்ல போதுமானதாக இருப்பதை மருத்துவர் உறுதிப்படுத்தினார். ஆர்யனும், ரஞ்சித்தும் அவர்களை வீட்டுக்கு அழைத்து வர மருத்துவமனைக்கு சென்றனர்.
இதற்கிடையில், சஞ்சுவும், கௌசல்யாவும் அவர்களுக்கு அறையை தயார் செய்து கொண்டிருந்தனர், எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சஞ்சு உறுதிப்படுத்திக் கொண்டாள். அவர்களின் வருகைக்காக லிவிங் அறையில் சஞ்சு உற்சாகமாக காத்திருந்தாள். வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டதும், கௌசல்யாவை அழைத்துக் கொண்டு ஒரு ஆர்த்தித் தட்டுடன் வெளியே சென்றாள்.
காரில் இருந்து இறங்கி வாசற்படியை அடைந்ததும் கௌசல்யா இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றார். அனைவரும் உள்ளே சென்றதும் தேவிகா கௌசல்யாவை பார்த்து, “கௌசல்யா, எப்படி இருக்க ?” என்று உடனே கேட்டார்.
“ நான் நல்லா இருக்கேன் மேடம். உங்க ரெண்டு பேரையும் மறுபடியும் பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ” என்று கௌசல்யா குரலில் உணர்ச்சி ததும்ப கூறினார்.
ஆர்யன் புன்னகையுடன் முன்னால் சென்று, “அம்மா, கௌசல்யா மா தான் என்ன இத்தன வருஷமா பார்த்துகிட்டாங்க. என்ன மட்டும் இல்ல, சஞ்சுவ கூட அவ்ளோ நல்லா பார்த்துக்குறாங்க “ என்று அவன் பெருமையுடன் கூறினான்.
விஷ்ணு புன்னகையுடன் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்தார். ” கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றி கௌசல்யா.” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட ஆர்யன் உடனே தன் அப்பாவிடம், “இல்ல அப்பா, அவங்களுக்கு நன்றி சொல்ல வேண்டாம். அப்படி சொன்னா, அவங்கள பிரிச்ச மாதிரி ஆயிடும். அவங்க அம்மா மதிர் எங்கள பார்த்துகிட்டாங்க அதனால நன்றி சொன்னா தப்பா இருக்கும் “ என்று கூறினான்.
விஷ்ணு நன்றியுடன் தன் பார்வையை உயர்த்தி, “ நீ சொல்றது சரி தான் ஆர்யன்.” என்றார்.
அருகில் சஞ்சு நிற்பதைப் பார்த்த தேவிகா கையை நீட்டி, “சஞ்சு, என் பக்கத்துல வந்து உட்காரு” என்று அன்பாக அழைத்தார். சஞ்சு உடனே அமர்ந்ததும் தேவிகா அவளை அன்புடன் அணைத்து நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.
“எங்க வாழ்க்கையில் எல்லாமே திரும்பக் கிடைச்சுடுச்சு. இதெல்லாம் நடக்கும், இந்த நாள பார்ப்பேன்னு நான் ஒருநாளும் நினைக்கவே இல்ல. இது ஒரு கனவு மாதிரி இருக்கு “ என்று சொன்ன தேவிகாவின் குரல் உணர்ச்சியில் நடுங்கியது.
அதற்கு சஞ்சு உடனே அவர் கையை ஆதரவாக பிடித்து, “அம்மா, இனிமே நாம சந்தோஷமா இருப்போம். எல்லாமே சரி ஆயிடுச்சு “ என்று சொல்லி புன்னகைத்தாள்.
“சஞ்சு மா, உங்க கல்யாணத்த தான் எங்களால பார்க்க முடியாம போச்சு ஆனா இப்போ எங்க பேரக்குழந்தைய பார்க்க போறோம். அது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ? நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதெல்லாம் பார்க்கும் போது அந்த கஷ்டம் எல்லாமே பெருசா தெரியல “ என்று விஷ்ணு கூறினார், அவரது குரல் மென்மையாகவும் பெருமிதம் நிறைந்ததாகவும் இருந்தது.
தேவிகா ரஞ்சித்தை நெருங்கி, “ரஞ்சித், இங்கே வா. நீயும் எங்க மகன் தான். நீ இபப்டி ஒரு மூலையில் நிற்க வேண்டிய அவசியம் இல்ல. “ என்று சொன்னதும், ரஞ்சித் நன்றி ததும்பும் குரலில் “கண்டிப்பா மேடம், ரொம்ப நன்றி ” என்று சொன்னான். அதற்கு விஷ்ணு உடனே, “ டேய், அப்பா, அம்மா சொல்லு “ என்றார்.
அவர் வார்த்தையை கேட்ட ரஞ்சித் மனம் தளர்ந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அந்த ஜோடியைப் பார்த்து, “கண்டிப்பா… அம்மா.” என்று மென்மையான குரலில் கூறினான்.
விஷ்ணு எழுந்து நின்று ஆர்யனையும் ரஞ்சித்தையும் இழுத்து அன்புடன் அணைத்துக் கொண்டார். பின்னர் அவர் தேவிகாவை பார்க்க, அவர் உடனே சஞ்சுவின் கையை பிடித்து தன்னுடன் இழுத்து அவர்கள் அனைவரும் ஒன்றாக கட்டி தழுவினர். அவர்களின் கரங்கள் இதயப்பூர்வமான குடும்ப அணைப்பில் பின்னிப் பிணைந்தன.
ஆர்யன் ஒரு கணம் கண்களை மூடினான், நிம்மதி அவனுக்குள் கலந்தது. அவர் தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தனது குடும்பத்தை மீட்டெடுத்ததற்காகவும், இறுதியாக அவர்களின் மகிழ்ச்சியைத் திருப்பிக் கொடுத்ததற்காகவும் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் அமைதியான பிரார்த்தனையை முணுமுணுத்தான்.
கௌசல்யா குடும்பத்திற்கு ஒரு சிறப்பு மதிய உணவைத் தயாரித்தார், அனைவரும் மேசையில் அமர்ந்தபோது, ஆர்யன் தன் அப்பாவிடம், “ அப்பா, நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று ஆரம்பித்த அவனது குரல் சீராகவும் அதே சமயம் ஆர்வமாகவும் இருந்தது.
விஷ்ணு தலையசைத்து “ ஹ்ம்ம், சொல்லு ஆர்யன் “ என்றார்.
ஆர்யன் ஆழமாக மூச்சை இழுத்து விட்டான். “நீங்க ரெண்டு பேரும் பாதுகாப்பா உயிரோட இருக்கீங்கனு நாம எல்லாருக்கும் சொல்லணும். அதே நேரம் சந்திரசேகர பண்ணத நான் வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்த விரும்பல. நரேன் மறுபடியும் காயப்படுறத என்னால பார்க்க முடியாது, அதனால சில கிராமவாசிகள் உங்கள காப்பாத்தி, இப்போ நீங்க ரெண்டு பேரும் பத்திரமா வீட்டுக்கு வந்துட்டீங்கனு சொல்லலாமா? உங்கள காப்பாத்துனது பத்தி நாம ரொம்ப விவரமா எதுவும் சொல்ல வேணாம் “ என்று ஆர்யன் கூறினான்.
விஷ்ணு தன் இருக்கையில் பின்னால் சாய்ந்தார், அவர் முகத்தில் ஒரு நிம்மதி புன்னகை இருந்தது. “ஆர்யன், நானும் இத தான் யோசிச்சேன். செத்து போன ஒருத்தன குறை சொல்லி என்ன ஆகா போகுது ? நீ சொன்ன மாதிரியே செய்வோம் ” என்றார்.
ஆர்யனின் கண்கள் புதிய உறுதியுடன் ஒளிர்ந்தன. “அப்புறம் அப்பா, பிசினஸ் பத்தி பேசுவோம், நீங்க மறுபடியும் இண்டஸ்ட்ரிக்கு வரணும், பழையபடி நீங்க எல்லாத்தையும் கம்பீரமா கட்டி ஆளணும்.” என்று சொன்னான் ஆனால் விஷ்ணு தலையை மெல்ல மறுத்து அசைத்தார். “இல்ல, ஆர்யன். பிசினஸ் பண்ணது எல்லாம் எல்லாம் போதும். இப்போ நான் என் குடும்பத்தோட மட்டும் தான் இருக்க விரும்புறேன். சீக்கிரம் நம்ம வீட்ல ஒரு குழந்த வரும். என்னோட நேரத்த உங்க எல்லார் கூடவும் மட்டும் செலவழிக்க விரும்புறேன் “ என்று தன் எண்ணத்தை கூறினார்.
ஆர்யன் மேலும் பேசுவதற்குள் குறுக்கிட தேவிகா அதை ஆமோதிப்பது போல் புன்னகைத்து, “ ஆமா ஆர்யன். உங்க அப்பா சொல்றது சரிதான்.” என்று சொன்னார்.
ஆர்யன் தலையசைத்துவிட்டு, “சரி மா. நான் எதுக்கும் வற்புறுத்தமாட்டேன் “ என்று சொல்லி புன்னகைத்தான்.
மதிய உணவிற்குப் பிறகு, தேவிகாவும் விஷ்ணுவும் தங்கள் அறைக்குச் சென்றனர், அங்கு சஞ்சுவால் அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டிருந்தன. அவளது அக்கறையைக் கண்டு அவர்கள் மனம் நெகிழ்ந்தனர்.
சஞ்சு ஆர்யனுக்கு சைகை செய்து, “போய் கொஞ்ச நேரம் அவங்களோட உட்காரு ” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
ஆர்யன் உள்ளே நுழைந்து தன் அம்மா கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க, அப்பா சோபாவில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவன் தன் அம்மாவின் மடியில் மெல்ல தலை வைத்து படுத்ததும், தேவிகா அவன் தலைமுடியைக் கோத ஆரம்பித்தார். அப்போது ஆர்யனின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்தது.
சில நிமிடங்கள் கழித்து, அவன் எழுந்து சென்று தனது அப்பாவின் அருகில் உட்கார்ந்தான்.
“அப்பா, நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்று ஆர்யன் அமைதியாக ஆரம்பித்தான்.
விஷ்ணு அவனைத் தொடரும்படி சைகை செய்து, “ ஹ்ம்ம், சொல்லு ஆர்யன் “ என்றார்.
“சந்திரசேகர் ஏன் உங்கள இப்படி சித்ரவத செய்தாரு “ என்று குரல் நடுங்க ஆர்யன் கேட்டான்.
ஆர்யனின் கேள்வியால் விஷ்ணு பெருமூச்செறிந்தார். “நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். அப்படி தான் நான் நெனச்சேன். நான் பிசினஸ்ல பெருசா சாதிக்குறத பார்த்து அவன் சந்தோஷப்பட்டான்னு நான் நெனச்சேன் ஆனா நான் அப்படி நெனச்சது ரொம்ப தப்பு. அவன் என் பதவிய விரும்பி இருக்கான், நம்ம பிசினஸ் எல்லாம் நஷ்டம் ஆகணும், எல்லாத்தையும் அழிக்க அவன் எனக்கு பின்னால வேலை பண்ணி இருக்கான் ஆனா அவன் நெனச்சது எதுவுமே நடக்கல. ஒரு நாள் அவன் எனக்கு பண்ண துரோகத்த நான் கண்டுபிடிச்சிட்டேன் ஆனா அவன் கிட்ட அத பத்தி கேட்குறதுக்கு முன்னாடி நான் சுவிட்சர்லாந்துல ஒரு பெரிய பிசினஸ் மாநாட்டுக்கு போக வேண்டி இருந்துச்சு.
நான் எப்பவும் பிசினஸ், வேலை இப்படியே இருந்ததால உன் அம்மாவ எங்கேயும் கூட்டிட்டு போகல ஆனா அவளுக்கு என் கூட சுவிட்சர்லாந்து போகணும்னு ரொம்ப ஆச அதனால நான் உன் அம்மாவ கூட்டிட்டு போக பிளான் பண்ணேன். அன்னைக்கு நாங்க ஜெட்ல போக கிளம்பி ஏர்போர்ட் போனோம் ஆனா சில ஆளுங்க வழியிலேயே எங்க ரெண்டு பேரையும் கடத்திட்டு போயிட்டாங்க “ என்று சொன்ன விஷ்ணு, சற்று இடைவெளி விட்டார்.
” யார் எங்கள கடத்தினாங்கன்னு ரொம்ப நாளா எங்களுக்கு தெரியாம தான் இருந்துச்சு. அப்புறம் ஒரு நாள் சந்திரசேகர் வந்தான். அவனோட பழிவாங்குற எண்ணத்த வெளிப்படையா எங்க கிட்ட சொன்னான். நாங்கள் செத்துட்டோம்னு உலகத்துக்கு சொல்லிட்டு அவன் எங்கள சித்திரவத பண்ணான். சொத்து எல்லாத்தையும் கேட்டு கொடுமை பண்ணான் ஆனா நான் பணியவே இல்ல. அதுக்கு அப்புறம் எங்க உடம்பு சோர்வடை ஏதோ ஊசி போட ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல எங்க உடம்பு மொத்தமா இயங்குறது நின்னுடுச்சு “ என்று விஷ்ணு சொன்ன போது உணர்ச்சியால் குரல் கனத்தது.
ஆர்யன் தந்தையை இறுக அணைத்துக் கொண்டு மௌனமாக அழுதான்.
” இது எதுவும் தெரியாம நான் அந்த ஆள எனக்கு ஒரு வழிகாட்டியா பார்த்துட்டு இருந்தேன். அப்புறம் வைரம் பத்தி ஏதோ அந்த ஆளு சொன்னான், அது என்ன?” என்று ஆர்யன் கேட்டதும், விஷ்ணுவும் தேவிகாவும் சங்கடமான பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
“ஆர்யன் சில விஷயங்கள பத்தி தெரிஞ்சிக்காம இருக்குறது தான் நல்லது. அது எல்லாருக்கும் நல்லது “ என்று விஷ்ணு கவனமாகப் பேசினார்.
அப்போதும் மனம் கலங்கிய ஆர்யன், “அப்பா, அதனால எதிர்காலத்துல எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. அதனால சொல்லுங்க, ப்ளீஸ் ” என்று கேட்டான்.
தேவிகா அவன் கையைத் தொட்டு, “ஆர்யன் அந்த வைரத்த பத்தி தெரிஞ்ச யாருக்கும் நல்லது நடக்கவே இல்ல. அது பல மில்லியன் டாலர் மதிப்பு இருக்க ஒரு சாதாரண நீல வைரம். இத மட்டும் நம்பு போதும் “ என்று மெல்லச் சொன்னார்.
ஆர்யன் சரி என்று தலையசைத்து ஏற்றுக்கொண்டான். “சரி மா, நான் இதுக்கு மேல உங்கள கட்டாயப்படுத்த மாட்டேன் “ என்று கூறினான்.
விஷ்ணு புன்னகையுடன் அவன் தோளைத் தட்டினார். “இப்ப போய் சஞ்சுவ பாரு. நாங்க நல்லா இருப்போம், போய் அவள பார்த்துக்க” என்று கூறினார்.
ஆர்யன் புன்னகைத்து, “ சரி பா ” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
சஞ்சு சோபாவில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவள் அருகில் அமர்ந்து மெதுவாக அவள் கால்களை தன் மடியில் வைத்து அவள் கால்களை மசாஜ் செய்ய ஆரம்பித்தான்.
சஞ்சு சிரித்துக் கொண்டே அவனை அருகில் இழுத்து அவன் கன்னத்தில் மென்மையாக ஒரு முத்தமிட்டாள்.
***************************************
முன்னோட்டம்:
“கவலைப்படாத, நான் உன்ன காயப்படுத்த மாட்டேன். கொஞ்ச நேரம்டி. ஒரு குட்டி ரொமான்ஸ் மட்டும் போது, முழுசா ஒன்னும் பண்ண வேண்டாம். நான் பாவம் இல்லையா ? “

1 comment
[…] Chapter 86 […]