‘காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்‘. இந்த கதையின் நாயகி மைரா, தன் வாழ்க்கையில் நட்பு, காதல், காதல் தோல்வி, ஏமாற்றம் என பல வலிகளை உணர்ந்து, மனம் உடைந்து போகிறாள். அந்த வலியில் இருந்து அவளை மீட்டு, அவளுக்கு ஒரு புது அடையாளத்தை உருவாக்க உதவும் நாயகனுடன் அவளுக்கு நடக்கும் திடீர் திருமணம், ஒரு புது மாற்றத்தை கொடுக்குமா ? உண்மையில் அவளது திருமணம் திடீரென்று நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா ? அவளை சற்றி இருக்கும் ரகசியங்கள் வெளி வரும் போது அவள் அனுபவித்த காதல் தோல்வி, அதன் வலி எல்லாமே வெறும் மாயை என்பது மட்டும் அல்ல, பற்றியும் அவள் அறியாத ரகசியங்களும் வெளிவருகிறது.
நட்பு, காதல், காதல் தோல்வி, ஏமாற்றம் என பல வலிகளை உணர்ந்து, மனம் உடைந்து இருக்கும் நாயகிக்கும், அந்த வலியில் இருந்து அவளை மீட்டு, அவளுக்கு ஒரு புது அடையாளத்தை உருவாக்க உதவும் நாயகனுடன் அவளுக்கு நடக்கும் திடீர் திருமணம், ஒரு புது மாற்றத்தை கொடுக்குமா ?
***********************
நீ குட்டியா அழகா இருக்க !
குளிர்ந்த மாலையில் வீசிய இதமான காற்று, புதிய வீட்டின் முன் முற்றத்தில் பட்டாம்பூச்சிக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த சுட்டி குழந்தை மைராவின் அழகான ஃப்ராக்கை (frock ) அசைத்தது. அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டதும் அவளது பிஞ்சுக் கால்கள் தரையில் ஊன்றி சட்டென்று நின்றன. அவள் உதடுகள் புன்னகையில் வளைந்து, அவள் தன்னை மறைக்க ஓடினாள், ஆனால் அவள் ஒளிந்து கொள்வதற்கு முன்பு அவளுடைய அம்மா அவளைத் தூக்கிச் சுழற்றினார்.
“ மைரா, என் செல்லக் குட்டி, வா நாம பக்கத்து வீட்டுக்கு போய் ஸ்வீட் கொடுத்துட்டு வரலாம். அப்படியே என் குடி மைரா கூட நிறைய friends கிடைப்பாங்க “ என்று அவள் அம்மா வசுந்தரா சொன்னதை கேட்ட குட்டி தேவதை மைரா, “ அம்மா, எனக்கு நிறைய பென்ட்ஸ் (friends) வேணும் “ என்று தனது மழலை மொழியில் அழகாக சொன்னாள்.
தன் மகளின் வார்த்தைகளைக் கேட்டு வசுந்தரா சிரித்தார். மைராவின் கையை பிடித்துக் கொண்டு இருவரும் பக்கத்துக்கு வீட்டுக்கு சென்றனர். அவர்கள் மூடிய கதவுகளை அடைந்ததும், வசுந்தரா கதவு மணியை அழுத்தி, யாராவது அதைத் திறப்பதற்காகக் காத்திருந்தாள்.
மைரா தன் மென்மையான உள்ளங்கைகளை வைத்து கதவைத் தட்டினாள். ஒரு நிமிடம் கழித்து கதவு திறந்து ஒரு சிறுவன் வசுந்த்ராவின் முன் நின்றான். தன் பேண்ட்டை யாரோ இழுப்பதை உணர்ந்த அந்த சிறுவன், குனிந்து பார்த்தான். குட்டி மைரா தலையை அழகாக சாய்த்து அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
“ அம்மா, பென்ட் (friend ) “ என்று மைரா சொல்ல, “ ஆமா செல்லம் friend தான் “ என்று வசுந்தரா கூறினார். அவர் மேற்கொண்டு பேசுவதற்குள் அந்த சிறுவன் தன் அம்மா அர்ச்சனாவை அழைத்தான். அவரும் புன்னகையுடன் துண்டால் கைகளை துடைத்துக் கொண்டு வந்தார்.
“ உள்ள வாங்க. நீங்க தான் பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்து இருக்கீங்களா ? “ என்று அர்ச்சனா கேட்டார் ஆனால் வசுந்தரா பதில் சொல்வதற்குள் வசுந்தரா மைராவை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அர்ச்சனா மைராவைப் பார்த்து புன்னகைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ நான் வசுந்தர், என் வீட்டுக்காரர் ராஜன், இவ எங்க ஒரே பொண்ணு மைரா “ என்று வசுந்தரா தன்னை அறிமுகம் செய்து கொண்டதும், அர்ச்சனா புன்னகையுடன், “ நான் அர்ச்சனா, என் வீட்டுக்காரர் பேரு மதன். இவன் எங்க மூத்த பையன் கேஷவ், சின்னவன் பேரு க்ரிஷ், உள்ள தூங்கிட்டு இருக்கான் “ என்று அவர் குடும்பத்தை பற்றி அறிமுகம் செய்தார்.
மைரா சோபாவில் ஏறி கேஷவின் அருகில் நின்று அவன் தோளில் தன் உள்ளங்கையை வைத்து அவன் புத்தகத்தை எட்டிப் பார்த்தாள். கேசவ் அவளது அழகை பார்த்து சிரித்தபடி அவள் மூக்கை சுளித்தான். உடனே அவள், “ நோ “ என்று சொல்லி அவனது முகத்தின் மட்டத்திற்கு குனிந்து அவனின் மூக்கை கிள்ள முயன்றாள் ஆனால் கேஷவ் அவளுடன் விளையாட தலையைச் சாய்த்தான். அவன் விளையாடுவதை கவனித்த மைரா அவன் மடியில் நகர்ந்து அவன் மூக்கைக் கிள்ளி அவனைச் சிரிக்க வைத்தாள்.
வசுந்த்ரா கொண்டு வந்த இனிப்பை அர்ச்சனாவிடம் கொடுத்துவிட்டு, மைராவை பத்திரமாக தன் மடியில் வைத்துக் கொண்டிருந்த கேஷவுடன் மைரா விளையாடிக் கொண்டிருப்பதைக் இருவரும் கண்டனர்.
“ உன் பேரு என்ன குட்டி பொண்ணு ?” என்று கேஷவ் கேட்க, அவள் முகத்தை சாய்த்து, “ மைரா, உங்க பேரு என்ன ? என்று அவனிடன் கேட்டாள்.
“ கேஷவ் “ என்று அவன் தன் பெயரை சொன்னதும், சற்று யோசித்த மைரா, “ கெட்ச்அப் “ என்று அவன் பெயரை உச்சரித்தாள். அவள் தன் பெயரை உச்சரிக்க முடியாததைக் கேட்டு கேஷவ், அர்ச்சனா மற்றும் வசுந்தரா புன்னகைத்தனர்.
“ அவர அண்ணா சொல்லி கூப்பிடு மைரா “ என்று வசுந்தரா அவளிடம் சொன்னார் ஆனால் குட்டி மைரா மறுத்து வேகமாக தலை அசைத்து, “ இல்ல, ஃபென்ட் (friend ) என்று பதில் சொன்னாள். அவள் வார்த்தையை கேட்ட கேஷவ், “ உனக்கு என் கூட friend ஆகணுமா ? “ என்று கேட்டான்.
காதைச் சொறிந்து கொட்டாவியுடன் ஆம் என்று தலையை அசைத்த மைரா, அவன் மார்பில் சாய்ந்து கண்களைக் கசக்கினாள். அவள் உறங்க முற்படுவதை பார்த்த வசுந்தரா, மைராவைத் தூக்கி மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.
“ ரொம்ப நேரமா விளையாடிட்டு இருந்தா அதனால களைப்பா இருக்கா. நான் வீட்ல பொருள் எல்லாம் எடுத்து வெச்சுட்டு இருந்ததால இவள தூங்க வைக்க முடியல “ என்று சொல்லிக் கொண்டே வசுந்தரா தன் மகளின் தலை முடியை கோதினார்.
தூக்கக் கலக்கத்தில் ஒரு குரல் கேட்டு, அர்ச்சனாவின் இளைய மகன் க்ரிஷ் வெளியே வருவதை அவர்கள் பார்த்தார்கள். க்ரிஷ், மைராவைப் பார்த்ததும் ஓடி சென்று அவளுக்கு எதிரே உட்கார்ந்தான். அவனை கண்டதும் மைராவின் தூக்கம் கூட எப்போதோ மறந்து அவளும் அவன் முன் அமர்ந்தாள்.
“ ஹலோ, நீ யாரு ? “ என்று க்ரிஷ் கேட்டதும், மைரா புன்னகைக்க, அர்ச்சனா அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். க்ரிஷ் மைராவின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு அவளுடன் சேர்ந்து ரைம்ஸை பாடி விளையாடிக் கொண்டிருந்தான்.
“ அம்மா, எனக்கு இவள ரொம்ப புடிச்சு இருக்கு. இனிமே நாங்க ரெண்டு பேரும் friends “ என்று க்ரிஷ் சொன்னதும், மைரா கைகளைத் தட்ட, இருவரும் ஒன்றாக விளையாட ஓடினர். வசுந்தராவும், அர்ச்சனாவும் ஒருவருக்கொருவர் மிக எளிதாக பழகி மைராவும், கிருஷும் ஒன்றாக விளையாடுவதைப் பார்த்தார்கள்.
“ கேஷவ் விட க்ரிஷ் சின்னவனா இருக்கான் “ என்று வசுந்தரா கேட்க, அதற்கு அர்ச்சனா, “ ஆமாம். கேஷவ்க்கு 14 வயசு, க்ரிஷுக்கு இப்போ தான் 6 வயசு. கேஷவ்க்கு அவன் தம்பி மேல பாசம் அதிகம், ரொம்ப அக்கறையா பார்த்துக்குவான். கேஷவ் அவ்ளோ சீக்கிரம் யார் கிட்டயும் பேச மாட்டான் ஆனா க்ரிஷ் அதுக்கு அப்படியே நேர் எதிர “ என்று கூறினார்.
கேஷவ் படிப்பில் மும்முரமாக இருப்பதைக் கண்ட வசுந்தரா, அவனைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. வீட்டுக்கு திரும்ப நேரம் ஆனது என்று சொல்லி அவர் மைராவை அழைத்தார், ஆனால் மைரா வெளியேற மறுத்து, க்ரிஷுடன் சேர்ந்து பொம்மைகளுடன் தொடர்ந்து விளையாடினாள்.
“ அம்மா, மைராவ நம்ம கூடவே வச்சுக்கலாமா? இவ ரொம்ப குட்டியா, அழகா இருக்கா “ என்று க்ரிஷ் கேட்டதும், “ க்ரிஷ், இங்க வா. நீ இன்னும் ஹோம்வொர்க் முடிக்க வேண்டி இருக்கு. நாளைக்கு விளையாடலாம் “ என்று சொல்லி கேஷவ் அவனை அழைத்தான். ஆனால் க்ரிஷ் அதற்கு, “ இல்ல அண்ணா, நான் மைராவு கூட விளையாட விரும்புறேன் “ என்று பதில் சொல்லிவிட்டு, மைராவின் கையைப் பிடித்து அவளை படுக்கையறைக்கு இழுத்துச் சென்றான். இருவரும் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர், க்ரிஷ் அமைதியாக இருக்கும்படி சைகை செய்த போது மைரா சிரித்தாள். அறைக்குள் நுழைந்த அர்ச்சனா மைராவை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள்.
“ மைரா, நான் உன்ன நாளைக்கு விளையாட கூட்டிட்டு வரேன். இப்போ க்ரிஷ், கேஷவ் ரெண்டு பேரும் படிக்கணும் “ என்று வசுந்தரா சொல்ல, “ அம்மா, பீஸ் (ப்ளீஸ்) “ என்று கெஞ்சிய மைரா, வசுந்த்ராவிடம் இருந்து இறங்கி கேஷவிடம் ஓடினாள், அவள் கால் இடறி கீழே விழுவதற்குள் கேஷவ் அவளைப் பத்திரமாக பிடித்துக் கொண்டான்.
“ பாத்து குட்டி பொண்ணு, இங்கே வா “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அவனருகில் சென்றாள் ஆனால் அவள் அமர்வதற்கு முன் க்ரிஷ் கேஷவின் அருகில் அமர்ந்து கொண்டு மைராவை இழுத்து தன் அருகில் உட்கார வைத்தான்.
“ அண்ணா, எனக்கும் மைராவுக்கும் சொல்லிக் கொடுங்க நாங்க சேர்ந்து படிக்குறோம் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்ட கேஷவ் மைராவிடம் ஒரு பேப்பரையும், கலர் பென்சிலையும் கொடுத்து விட்டு, க்ரிஷ் ஹோம்வொர்க் எழுத உதவினான்.
“ வசு, நீ ரொம்ப டயர்டா இருக்க அதனால கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணு, மைரா இங்க இருக்கட்டும். அவ உன்ன கேட்கும் போது நான் அவள கூட்டிட்டு வரேன் “ என்று அர்ச்சனா சொன்னார் அதற்கு வசுந்தரா, “ முதல் நாளே உன்ன தொந்தரவு செய்ய நான் விரும்பல அர்ச்சனா “ என்று கூறினார். ஆனால் அர்ச்சனா, “ ஒன்னும் பிரச்சனை இல்ல, க்ரிஷ், மைரா ரெண்டு பேரையும் கேஷவ் பார்த்துக்குவான். இந்த வயசுல அவன் ரொம்ப பொறுப்பா இருப்பான் “ என்று கேஷவை புகழ்ந்தார்.
“ நான் பார்த்துக்கறேன் ஆன்டி “ என்று கேஷவ் உறுதி அளித்த அதே நேரம் மைரா தன் அம்மாவை பார்த்து, “ அம்மா பை. உம்மா “ என்று உதட்டை குவித்து அழகாக முத்தம் கொடுத்தாள்.
வசுந்த்ராவும், அர்ச்சனாவும் அவளின் சுட்டித்தனத்தை பார்த்து சிரித்தனர். மைராவை கவனித்துக் கொண்டதற்காக வசுந்தரா அவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியேறினார்.
கேஷவ், க்ரிஷ் மாற்றம் மைரா அமர்ந்திருந்த சோபாவின் முன் இருந்த மேஜை மூவருக்கும் மிகவும் சிறியதாக இருந்ததால், மைராவுக்கு எரிச்சலாக இருந்தது, எனவே அவள் சோபாவிலிருந்து கீழே குதித்து தரையில் படுத்துக் கொண்டு பேப்பரில் கிறுக்க ஆரம்பித்தாள். அவளின் ஓவியம் முடிந்ததும் கேஷவிடம் விரைந்து சென்று பெருமிதப் புன்னகையுடன் காட்டினாள். அதை பார்த்த கேஷவ், “ ஆஹா, இது அருமையா இருக்கு குட்டி பொண்ணு “ என்று அவளை உற்சாகப்படுத்தினான் ஆனால் மைரா மூக்கைச் சுளித்துக் கொண்டு கேஷவைப் பார்த்தாள்.
“ என்ன ஆச்சு குட்டி பொண்ணு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நான் குட்டி பொண்ணு இல்ல, மைரா “ என்றாள் செல்லாமாக கோவம் கொண்டு. அவள் செல்ல கோவத்தை பார்த்து கேஷவ் சத்தமாக சிரித்தான்.
“ நீ குட்டியா அழகா இருக்க அதனால அப்படி கூப்பிட்டேன் அம்மு “ என்று கேஷவ் சொன்னதும், மைரா ஒரு புன்னகையை உதிர்த்து, அவன் முகத்தை அடைய, தன் உள்ளங்கைகளை அவன் முழங்கால்களில் வைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
க்ரிஷ் தனது வீட்டுப்பாடங்களை அதிவேகமாக முடித்துவிட்டு , மைராவை பொம்மைகளுடன் தங்கள் விளையாட்டைத் தொடர இழுத்துச் சென்றான். கேஷவ் ஒன்றும் சொல்லமல் அவர்களை விளையாட விட்டான். சில நிமிடங்கள் கழித்து மைராவின் இமைகள் சரிவதைக் கண்ட கேஷவ் அவளைத் தன் கைகளில் ஏந்தினான். மைரா சட்டென அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“ அம்மா, மைராவுக்கு தூக்கம் வந்துடுச்சு, சீக்கிரம் வாங்க ” என்று கேஷவ் அழைத்ததும், அர்ச்சனா மைராவை தூக்கிக்கொண்டு வசுந்த்ராவின் வீட்டை அடைந்தாள்.
அடுத்த நாள் க்ரிஷும், கேஷவும் பள்ளிக்கு செல்ல தயாரானார்கள். அவர்களின் அப்பா அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல இருவரும் காத்திருந்தனர். மைரா பள்ளிக்கு தயாராக இருப்பதைப் பார்த்த க்ரிஷ் அவளிடம் ஓடிச்சென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, ” bye மைரா, சாயங்காலம் விளையாடுவோம் ” என்று சொன்னான். அதற்கு மைராவும், ” bye க்ரிஷ், bye கெட்ச்அப் ” என்று சொல்லி கை அசைத்தாள். கேஷவ் ஒரு புன்னகையோடு, ” bye அம்மு ” என்றான்.
மதனும், ராஜனும் ஒருவருக்கொருவர் வணக்கம் பரிமாறிக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறும் முன் புன்னகையுடன் விடைபெற்றனர்.
வசுந்த்ரா மைராவை பள்ளியில் இருந்து அழைத்து வந்ததும் மைரா அர்ச்சனாவின் வீட்டிற்கு ஓட முயன்றாள், ஆனால் வசுந்தரா அவளைத் தடுத்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மைரா வெளியே விட சொல்லி அழுது கொண்டிருந்தாள், ஆனால் வசுந்த்ரா அவளைத் தடுத்து, “ மைரா! க்ரிஷும், கேஷவும் இன்னும் ஸ்கூல்ல இருந்து திரும்பி வரல. நீ தூங்கி எழுந்தா க்ரிஷ் வந்ததும் அவன் கூட விளையாடலாம் ” என்று சொல்லி சமாதானம் செய்தார்.
மைரா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அம்மாவின் அருகில் படுத்துக் கொண்டாள். தூங்கி எழுந்த பின்னர் எரிச்சலான முகத்துடன் போர்டிகோவில் அமர்ந்திருந்தாள். வசுந்த்ரா அவளுக்காக வைத்திருந்த நொறுக்குத் தீனிகளை பார்த்துக் கொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்தாள். காம்பவுண்ட் சுவரின் மறுபுறத்திலிருந்து கேஷவ் தன்னைப் பார்ப்பதைக் கண்டவள், எந்த உணர்ச்சியும் காட்டாமல் மெதுவாகக் அவனுக்கு கைகளை அசைத்தாள்.
மைரா தனது சிறிய நாற்காலியில் இருந்து இறங்க இருந்த போது க்ரிஷ் அவளிடம் ஓடி சென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான். ஏற்கவனே எரிச்சலுடன் இருந்த மைரா மேலும் முகல் சுளித்தாள் ஆனால் க்ரிஷ் அவளுக்கு சாக்லேட் கொடுத்து சமாதானம் செய்ததான்.
” வா மைரா நாம விளையாடலாம். நான் என்னோட ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சிட்டேன் அதனால ரொம்ப நேரம் விளையாடலாம் ” என்று க்ரிஷ் சொன்னதும், மைரா அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஓடினாள். இருவரும் ஒன்றாக கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள், கேஷவ் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். முந்தைய நாளைப் போலவே க்ரிஷும் மைராவும் சோர்வாகவும் பசியுடனும் இருக்கும் போது மட்டுமே அவரவர் வீட்டிற்குத் திரும்ப ஒப்புக்கொண்டனர்.
நாட்கள் போக, க்ரிஷும், மைராவும் பிரிக்க முடியாதவர்களாக, ஒன்றாக விளையாடுவதற்கான நேரத்திற்காக காத்திருந்தனர். அர்ச்சனாவின் வீட்டுக்கு ஓடி வந்த க்ரிஷ், மைராவைக் கூப்பிட்டான். அர்ச்சனா பதில் சொல்வதற்குள் மைரா கையில் ஒரு பட்டாம்பூச்சி பொம்மையுடன் அறையை விட்டு வெளியே வருவதைப் பார்த்தான். உடனே ஓடி சென்று அவள் கையை பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான்.
“ அம்மா, க்ரிஷ், கிஸ்ஸி ” என்று அவன் முத்தம் கொடுத்ததை தன் அம்மாவிடம் மைரா புகார் செய்து, தன் கன்னங்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள், ஆனால் அவன் அவளைப் பார்த்து சிரித்தான்.
” அவன் உன் friend அதனால கிஸ் பண்ணான் ஆனா உனக்கு புடிக்கலனா அவன் உன்ன கிஸ் பண்ண மாட்டான் ” என்று மைராவிடம் சொன்ன வசுந்தரா பின்னர் க்ரிஷை பார்த்து, ” நான் சொன்னதும் சரி தானே க்ரிஷ் ? ” என்று கேட்டாள். ஆனால் அவன், ” இல்ல, நான் கிஸ் பண்ணுவேன். நேத்து நான் ஸ்கூல் போறதுக்கு முன்னாடி மைராவுக்கு கிஸ் கொடுத்துட்டு போனேன், என் maths எக்ஸாம்ல முழு மார்க் வாங்கிட்டேன், இவ என் லக்கி சார்ம் ” என்று சொல்லி மைராவின் கையைப் பிடித்து மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
” ஆன்டி, மைராவ என் ஸ்கூல்ல சேர்த்து விடுறீங்களா ? நாங்க ஒன்னா ஸ்கூல் போவோம், நான் இவள பார்த்துக்குறேன், ப்ராமிஸ் ” என்று க்ரிஷ் கெஞ்சினான், அதற்கு வசுந்தராவும், ராஜனும் அவனைப் பார்த்து புன்னகைக்க, அவள் அவன் தலைமுடியைக் கோதி, “ நிச்சயமா க்ரிஷ், ஆனா இப்போ இல்ல. அடுத்த வருஷம் கண்டிப்பா உன்னோட ஸ்கூல்ல சேர்த்து விடுறோம். நீயும், கேஷவும் அவள பார்த்துக்கலாம் ” என்று கூறினார்.
வசுந்தராவின் வார்த்தையை கேட்ட க்ரிஷ், “ இல்ல, நான் தான் பார்த்துக்குவேன், மைரா என்னோட friend ” என்று கூறினான், அதை கேட்ட மைரா உடனே அவனை பார்த்து, “ கெட்ச்அப் ஃபென்ட் ” என்று கேஷவை சேர்த்துக் கொண்டாள் ஆனால் க்ரிஷ் பிடிவாதமாக, “ இல்ல, நான் மட்டும் தான் உன் friend மைரா. அவர் என் அண்ணன், நமக்கு நிறைய டெஸ்ட் கொடுப்பாரு. நாம விளையாடுவோம், சரியா ? ” என்று கேட்டான்.
மைரா புன்னகையுடன் தலையை அசைத்தாள். அதன் பின்னர் பள்ளிக்குத் தயாராக தனது வீட்டிற்கு விரைந்த கிருஷ், அடுத்த கல்வி ஆண்டு மைரா தனது பள்ளியில் சேர்க்கப்படுவாள் என்று செய்தியைப் பகிர்ந்து கொண்டான்.
குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும் அர்ச்சனாவும், வசுந்தராவும் அரட்டை அடித்துக் கொண்டும், அர்ச்சனாவின் சிறிய தோட்டத்தைக் கவனித்துக் கொண்டும் பொழுதைக் கழித்தனர். ராஜன் வங்கியில் பணிபுரிவது குறித்தும், மதன் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிவது குறித்தும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களைப் போல மாறி, வசுந்த்ரா மைராவை பள்ளியிலிருந்து அழைத்து வரும் நேரம் வரும் வரை வம்பு பேசினர்.
மைரா ஸ்கூட்டியில் இருந்து கீழே குதித்து நேராக அர்ச்சனாவின் வீட்டிற்கு ஓடி அர்ச்சனாவின் மடியில் அமர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள். வசுந்த்ரா அவளைத் தொடர்ந்து வந்து, ” மைரா, நீ கொஞ்ச நேரம் தூங்கனும் அதனால என் கூட வா, க்ரிஷ் ஸ்கூல்ல இருந்து வந்ததும் கூட்டிட்டு வரேன் ” என்று சொன்னார் ஆனால் மைரா மறுத்து தலையை ஆட்ட, அர்ச்சனா அவளை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டாள்.
” விடு இவ என் கூட இருக்கட்டும், நான் இவள தூங்கவைக்குறேன் . பசங்க ஸ்கூல்ல இருந்து வரவரைக்கும் எனக்கு எந்த வேலையும் இல்ல ” என்று அர்ச்சனா சொன்னதும் வசுந்தரா சரி என்று கூறி தன் வீட்டிற்குச் சென்றார். ஷோ கேஸில் உள்ள பொம்மைகளைப் பார்த்துக் கொண்டே மைரா ஹாலில் நடந்து கொண்டிருப்பதை அர்ச்சனா பார்த்தார். கேஷவ் மற்றும் கிருஷின் அறைக்குள் நுழைந்து பேட் (bat ) மற்றும் பந்துகளை பார்த்தாள். படுக்கையில் ஏறி அமர்ந்து கிரிக்கெட் சீட்டுகளை வைத்து விளையாட ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் ஒரு பேனாவை எடுத்து அதில் கிறுக்க ஆரம்பித்தாள். அர்ச்சனா மைராவின் அருகில் அமர்ந்து அவள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
” எனக்கும் ஒரு பொண்ணு வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். கேஷவும், க்ரிஷும் அவ்ளோ பாசமா அவள பார்த்து இருப்பாங்க ஆனா நீ ஏற்கனவே அந்த இடத்த பிடிச்சிட்டனு நினைக்குறேன். என் பசங்க ரெண்டு பேருக்கும் உன்ன அவ்ளோ புடிச்சு இருக்கு, குறிப்பா க்ரிஷ். அந்த வாலு உன்ன விட தயாராவே இல்ல ” என்று அர்ச்சனா தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தார். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் அவராய் பார்த்த மைரா, தான் கிறுக்கி வைத்திருந்த சீட்டுகளைக் காட்டினாள்.
” இது எல்லாமே கேஷவ்க்கு ரொம்ப புடிச்ச கார்ட்ஸ் அதனால நாம இத வெச்சுட்டு வேற விளையாடலாம் ” என்று அர்ச்சனா சொன்னதை கேட்ட மைரா மறுத்து சீட்டுகளை கிறுக்குவதைத் தொடர்ந்தாள். சில நிமிடங்கள் கழித்து களைப்பில் அப்படியே படுக்கையில் படுத்து தூங்கினாள். அர்ச்சனா அவள் அருகில் ஒரு தலையணையை வைத்து விட்டு, க்ரிஷ் மற்றும் கேஷவ் வீட்டுக்கு திரும்புவதற்கு முன்பு சிற்றுண்டி தயாரிக்க சமையலறைக்கு சென்றார்.
கேஷவும், க்ரிஷும் வீட்டிற்குத் திரும்பி தங்கள் அறைக்குள் நுழைந்தனர், ஆனால் குட்டி மைரா உதடுகளைப் பிரித்து தூங்குவதைப் பார்த்ததும் அப்படியே வாசலில் நின்றார்கள். அவள் இன்னும் பள்ளிச் சீருடையில் இருந்தாள், அவளுடைய சிறிய பிக்டெயில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி கிளிப் இருந்தது. கையில் ஒரு கிரிக்கெட் சீட்டை பிடித்தபடி குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
உள்ளே நுழைந்த க்ரிஷ் சிதறிக் கிடந்த சீட்டுகளைப் பார்த்து உள்ளங்கையால் வாயை மூடிக்கொண்டு சிரித்தான். ” அண்ணா, உங்க கார்டுகள் எல்லாம் காலி ” என்று கேஷவிடம் சொல்லிவிட்டு, உறங்கிக் கொண்டிருந்தா மைராவை பார்த்து, ” நல்ல வேலை பண்ணி இருக்க என் friend ” என்று சொல்லி விட்டு கேஷவை பார்த்து நாக்கைக் காட்டி கிண்டல் செய்து விட்டு, மைராவை எழுப்பலாமா என்று கேட்க அம்மாவைத் தேடி வெளியே ஓடினான். கேஷவ் உடைந்த இதயத்துடன் ஒரு சீட்டை அட்டையை எடுத்தான். அவன் கண்கள் தன் சேகரிப்புகளை அழித்துவிட்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த குட்டி தேவதையை நோக்கிச் சென்றன. அவன் அவள் அருகில் அமர்ந்து அவள் தலைமுடியை கோதி, “ என்ன பண்ணி வெச்சுருக்க அம்மு ? இதெல்லாம் எனக்கு ரொம்ப புடிச்ச கார்ட்ஸ் தெரியுமா ? ” என்று சொல்லிவிட்டு, எல்லா அட்டைகளையும் எடுத்து மீண்டும் பெட்டியில் வைத்தவன், வெளியே சென்ற போது அம்மாவுடன் மோதினான்.
” கேஷவ், வருத்தப்படாத, நான் உனக்கு புது கார்டு வாங்கித் தரேன். மைரா அத வெச்சு விளையாடிட்டு இருந்தா, என்னால அவ கிட்ட இருந்து வாங்க மனசு வரல. நான் வாங்கி இருந்தா அவ அழுது இருப்பா ” என்று அர்ச்சனா சொல்ல, அதற்கு கேஷவ், “ பரவாயில்ல மா, அவ சின்ன பொண்ணு தானே, தெரியாம பண்ணிட்டா. எனக்கு புது கார்ட்ஸ் எதுவும் வேணாம் ” என்று கூறினான்.
” நீங்க புது கார்ட்ஸ் வாங்கி கொடுத்தா அதையும் என் friend இப்படி தான் செய்வா ” என்று சொல்லி க்ரிஷ் சிரிக்க, ” நாம சொல்லி புரிய வெச்சா அப்படி செய்ய மாட்டா ” என்று சொன்ன அர்ச்சனா, கேஷவை பார்த்து, ” அப்புறம் நீ இன்னும் சின்ன பையன் தான் கேஷவ் ” என்று சொன்னார். அதற்கு கேஷவ் கண்களை உருட்டி, “ அம்மா, எனக்கு பதினான்கு வயசு ஆயிடுச்சு, நான் வளர்ந்துட்டேன் ” என்றான்.
அர்ச்சனா புன்னகையுடன் சிற்றுண்டிகளை அவர்களிடம் கொடுத்தார். சில நிமிடங்களில் காலடிச் சத்தம் கேட்டு அனைவரும் தலை நிமிர்ந்து பார்த்த போது, மைரா கொட்டாவி விட்டபடி கையில் ஒரு அட்டையுடன் வெளியே வந்தாள். மூவரும் அவளைப் பார்த்து புன்னகைத்தனர், அர்ச்சனா அவளை முகம் கழுவி சாப்பிட சின்றுண்டி கொடுத்தார்.
*******************************
முன்னோட்டம்:

2 comments
[…] நீ குட்டியா அழகா இருக்க ! […]
[…] 1.நீ குட்டியா அழகா இருக்க ! […]