Home FamilyChapter 23

Chapter 23

by Siragugal Novels
21 views

மறுநாள் காலை, ஆர்யன் சஞ்சுவை தனது காரில் அழைத்துச் சென்றான்.

” எங்கே போறோம் ஆர்யன் ? நாம ஆபீஸ் போகலையா ? நாம ரெண்டு பேரும் ஒன்னா வர்றத யாராவது பார்த்தா என்ன பண்றது ?” என்று சஞ்சு கேள்வி மேல் கேள்வி கேட்டாள். அவளது குரலில் கவலை தொனித்தது.

” எவ்ளோ கேள்வி கேட்குற மா நீ ? கொஞ்சம் நேரம் பொறுமையா இரு, போன அப்புறம் உனக்கே தெரியும் “ என்று ஆர்யன் ஒரு புன்னகையுடன் பதிலளித்தான்.

சஞ்சு உதட்டைப் பிதுக்கி எரிச்சலுடன் மௌனமாக அமர்ந்திருந்தாள். ஆர்யன் அவள் மீண்டும் பேசுவாள் என்று பார்த்தான், ஆனால் அவள் அமைதியாக ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அவள் கையை மென்மையாக பிடித்து அவள் விரல்களில் மென்மையாக முத்தமிட்டான். உடனே சன்சுவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து, முன் பயணிகள் இருக்கையில் இருந்த ரஞ்சித்தை நோக்கி பார்த்தாள். ஆர்யன் சற்றும் கவலை இல்லாமல், ரஞ்சித்திடம் காரின் பகிர்வை எழுப்புமாறு சைகை காட்டினான். சில நொடிகளில் உன் இருக்கையும், பின் இருக்கையும் திரை பிரித்தது, அவர்கள் பின் இருக்கையில் தனியாக இருந்தனர்.

” என்ன செய்றீங்க ஆர்யன், அவர் என்ன நினைப்பாரு ?” என்று சஞ்சு முனுமுனுத்தாள். அதற்கு ஆர்யன், “ நமக்கு பிரைவசி வேணும்னு அவனுக்குத் தெரியும், அதனால ஒன்னும் நினைக்க மாட்டான் ” என்று அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று சாதாரணமாக சொன்னான்.

” வர வர ரொம்ப பண்ற டா நீ “ என்று சஞ்சு சொன்னதும் அதிர்ச்சியடைந்த ஆர்யன், “ என்னது டா வா ? “ என்று கேட்டான். சஞ்சு கொஞ்சமும் தயங்காமல் மீண்டும் அவனை பார்த்து, “ ஆமா டா “ என்று சொன்னாள். உடனே புன்னகையுடன் அவளைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு அவள் கன்னத்தைக் கடித்தான். “ நல்லா இருக்குடி நீ என்ன டா சொல்லி பேசுறது “ என்று சொல்லி கண்ணடித்தான்.

“ இதுக்கு தான் கடிச்சியா ? “ என்று சஞ்சு அவனை முறைத்துக் கொண்டே கேட்க, “ நீ என்ன டா சொன்னதுக்கு நான் கொடுத்த பரிசு “ என்று சொல்லி ஆர்யன் புன்னகைத்தான்.  

” ஆர்யன், நீ கடிச்ச அடையாளம் மட்டும் இருந்துச்சு அப்புறம் இருக்கு உனக்கு “ என்று சஞ்சு மிரட்டியதும், “ அடையாளம் எதுவும் இல்லாத மாதிரி கடிச்சேன் அதனால கவலைப்படாத “ என்று சொல்லி அவளை கிண்டல் செய்தான்.

கார் வேகம் குறைந்து நின்றது. ஆர்யன் காரில் இருந்து கீழே இறங்கி சஞ்சுவை கீழே இறக்க உதவினான். இருவரும் ஒன்றாக நடக்கும் போது அவள் இடுப்பில் மெதுவாக கையை வைத்தான்.

ரம்யாஸ் டிசைன்ஸ் என்ற நேர்த்தியான பேஷன் ஸ்டுடியோவுக்குள் இருவரும் சென்றனர். அந்த இடத்தை பார்த்த சஞ்சு, “ நாம ஏன் இங்க வந்துருக்கோம் ?” என்று குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி அவனிடம் கேட்டாள்.

” வா, சொல்றேன் ” என்றான் ஆர்யன் தெரிந்த புன்னகையுடன். அவர்கள் மேலும் உள்ளே சென்றதும் ஒரு ஸ்டைலான பெண் அவர்களை வரவேற்றார்.

” ஹலோ மிஸ்டர் ஆர்யன், உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். நீங்க சொல்லி இருந்தா நானே வந்துருப்பேனே ” என்று அந்த பெண் சொன்னதும், ” பரவாயில்ல ரம்யா, இவங்க சஞ்சனா, ரொம்ப ஸ்பெஷல், எனக்கு எல்லாமே இவங்க தான், ” என்றான் ஆர்யன். அவன் சொன்னதை கேட்டதும் சஞ்சு வியப்புடன் கண் சிமிட்டினாள். அவன் அவளை அப்படி அறிமுகம் செய்வது அதுவே முதல் முறை என்பதால் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தாள்.

ஆர்யன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்து கொண்டு, ” ஓ மை காட், வாழ்த்துக்கள் சஞ்சனா. உங்க ரெண்டு பேருக்காகவும் நான் ரொம்ப சந்தோஷப்படறேன்.” என்று ரம்யா மகிழ்ச்சியோடு கூறினாள். ” நாங்க இன்னும் எல்லாருக்கும் வெளிப்படையா, அதிகாரப்பூர்வமா சொல்லல, உங்களுக்கு நான் சொல்றது புரியும்னு நினைக்குறேன் “ என்று ஆர்யன் சொன்னதும், “ நீங்க என்ன நம்பலாம், உங்க ரகசியம் பாதுக்காப்பா இருக்கும் ” என்று ரம்யா உறுதியளித்தாள்.

” எனக்கு ஒரு ஸ்பெஷல் வேண்டுகோள் இருக்கு அதுக்காக தான் நானே இங்க வந்தேன் ” என்றுஆர்யன் சொன்னதும், “ நிச்சயமா நான் செய்றேன், அது என்னனு சொல்லுங்க ?” என்று ரம்யா கேட்டார்.

” சஞ்சனாவுக்கு நீங்க ஒரு காஸ்ட்யூம் டிசைன் பண்ணனும். சும்மா சாதரணமா இருக்க கூடாது, ரொம்ப  தனித்துவமா இருக்கணும். சஞ்சனாவ தவிர வேற யார் கிட்டயும் அப்படி ஒரு காஸ்ட்யூம் இருக்க கூடாது “ என்று சொன்ன ஆர்யன் கனிவும், மௌனமான வியப்பும் நிரம்பிய கண்களுடன் சஞ்சுவைப் பார்த்ததும் சஞ்சு தன் கன்னங்கள் சிவப்பதை உணர்ந்தாள்.

” ரொம்ப சந்தோஷமா நான் டிசைன் பண்றேன் சார், இப்போ நான் அவங்களோட அளவுகள எடுத்துக்குறேன். அதுக்கு அப்புறம் நான் டிசைன் வரைஞ்சு உங்களுக்கு அனுப்புறேன். அதுல இருந்து உங்களுக்கு புடிச்சத சொன்ன உடனே நான் ரெடி பண்ணிடுறேன் “ என்று ரம்யா சொன்னாள். ஆர்யன் உடனே, “ ரொம்ப நன்றி ரம்யா “ என்று சொல்லி தலையசைத்தான்.

ரம்யா சஞ்சுவின் அளவீடுகளை எடுத்த பின் விசேஷமாக இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த துணிகளைக் காட்டியதும் ஆர்யன் தனக்குப் பிடித்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதை இறுதி செய்தான்.

” காஸ்ட்யூம் கூட அதுக்கு மேட்சிங் நகை, இன்னும் வேற என்னலாம் வேணுமோ எல்லாமே மொத்தமா எனக்கு வேணும் “ என்று ஆர்யன் சொன்னதும், ” நிச்சயமா மிஸ்டர் ஆர்யன், உங்க சஞ்சனா பார்க்க ரொம்ப அழகாக இருப்பாங்க. நீங்க என்ன நம்பலாம் “ என்று ரம்யா உறுதி அளித்தாள். 

” நன்றி ரம்யா, சீக்கிரம் நாம சந்திப்போம் “ என்று சஞ்சு சொன்ன பிறகு அவர்கள் ஸ்டுடியோவை விட்டு புறப்பட்டனர். இருவரும்  வெளியே சென்றதும் சஞ்சு அவன் பக்கம் திரும்பி, “ இப்ப ஏன் எனக்கு ஸ்பெஷல் காஸ்ட்யூம் டிசைன் பண்ண சொல்லி இருக்கீங்க ஆர்யன் ? “ என்று கேட்டாள்.  

” பார்ட்டியில நீ மத்தவங்க கிட்ட இருந்து தனியா தெரியனும்னு நான் விரும்புறேன் “ என்று ஆர்யன் சொல்ல, அவனை ஒரு நொடி பார்த்த சஞ்சு, “  பார்ட்டிக்கு வர்றவங்க என்ன சந்தேகமா பார்க்க மாட்டாங்களா ? “ என்று கேட்டாள். அதற்கு உடனே ஆர்யன், “ பார்க்கட்டும், எனக்குக் கவலையில்ல ” என்று சொல்லி தோள்களை குலுக்கினான். பின்னர் கையில் இருந்த வாட்சில் நேரத்தைப் பார்த்து விட்டு, ” சரி லஞ்ச் டைம் ஆயிடுச்சு அதனால இப்போ என் ஆளு கூட லஞ்ச் சாப்பிடுற பாக்கியம் எனக்குக் கிடைக்குமா ?” என்று புன்னகைத்துக் கொண்டே கேட்க அவன் வசீகரத்தில் மறுக்க முடியாமல் சிரித்த சஞ்சு, “ ஆர்யன், நீ ரொம்ப ஸ்வீட் தெரியமா “ என்றாள்.   

” நீ ஸ்வீட் சொல்லும் போது எனக்கு ஜமூன் தான் ஞாபகம் வருது. இப்போ எனக்கு ஸ்வீட் சாப்பிடனும்னு ஆசையா இருக்கு ” என்றான் குறும்புச் சிரிப்புடன்.

” அய்யோ கடவுளே ! நாம வெளிய பப்ளிக்ல இருக்கோம் ஆர்யன் ” என்று சஞ்சு அதிர்ச்சியோடு சொல்ல அதற்கு ஆர்யன் உடனே, “ சரி அப்போ வீட்டுக்கு போனதும் சாப்பிடலாமா?” என்று கேட்டு கிண்டலடித்தான்.

” நீ இப்படியே பேசிட்டு இருந்தா அப்புறம் ஒண்ணுமே கிடைக்காது சொல்லிட்டேன் “ என்று சஞ்சு அவனை எச்சரித்தாள்.

அவள் சொன்னதை கேட்டதும், ” அய்யோ அதெல்லாம் முடியாது. நீ இப்படி சொன்னா அப்புறம் ஸ்வீட் மட்டும் இல்ல நான் முழு மீல்ஸ் சாப்பிட கேட்பேன் “ என்று ஆர்யன் அவள் காதில் கிசிகிசுத்தான். 

” ஆர்யன், எனக்கு கன்னம் வலிக்குது, போதும் இப்படி கிண்டல் செய்றத நிறுத்து “ என்று சஞ்சு சொன்னதும், “ நான் என்ன செய்றது ? நீ சும்மாவே அவ்ளோ அழகு இதுல வெட்கப்படும் போது இன்னும் அழகாக இருக்க. சரி வா போகலாம் ” என்று சொல்லிவிட்டு அவள் முகத்திலிருந்து முடியை ஒதுக்கினான்.

இருவரும் மீண்டும் காரில் ஏற, ஆர்யன் முன்னால் குனிந்து ரஞ்சித்திடம், “ பிரைவேட் லஞ்சுக்கு ஏற்பாடு பண்ணு ” என்றான்.

அவர்கள் ARC  ஹோட்டல்களை அடைந்த போது, ஊழியர்கள் தயாராக காத்திருந்தனர், நீண்ட காலமாக வருகை தராத தங்கள் முதலாளியை  வரவேற்க ஆர்வமாக இருந்தனர். இந்த பிரம்மாண்டமான வரவேற்புக்கு எப்போதும் பழக்கப்பட்ட ஆர்யன், பிரம்மாண்டமான நுழைவாயிலில் நடந்து செல்லும் போது அங்கு கூடி இருந்தவர்களை பார்த்து ஒரு புனகையுடன்  ஆமோதிப்பது போல் தலையசைத்தான்.

ஆர்யனும், சஞ்சுவும் அவனது  தனி லிப்டில் ஏறி  ஆர்யனின்  பிரத்யேக டைனிங்  அறைக்கு சென்றனர்.

உள்ளே நுழைந்ததும், ஆர்யன் சஞ்சுவின் பக்கம் திரும்பி, “நம்ம ஹோட்டல் எப்படி இருக்கு ?” என்று புன்னகையுடன் கேட்டான்.

சஞ்சு பிரமிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தாள், அவள் கண்கள் பளபளத்தன, “ பயங்கர ஆடம்பரமா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு  என்று பதில் சொன்னாள்.

சஞ்சுவின் பதிலை கேட்டு ஆர்யன்  மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ” நல்லது. உனக்கு பிடிச்சதுல எனக்கு சந்தோஷம்.” என்று சொல்லி அவள் அமர ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு அவளுக்குப் பக்கத்தில் தன் இருக்கையில் அமர்ந்தான். ஆர்யன் அவளைப் பார்த்து புன்னகைத்தான், அவன் கண்களில் ஒரு விளையாட்டுத்தனமான பளபளப்பு தெரிந்தது, ” சரி இப்போ உன்னோட சம்மதம் இருந்தா நம்ம ரெண்டு பேருக்கும் லஞ்ச் நான் ஆர்டர் பண்ணட்டுமா ? “ என்று ஆர்யன் கேட்டதும் சஞ்சு அவனை ஆச்சரிய புன்னகையுடன் பார்த்து புருவத்தை உயர்த்தினாள்.    

 ” தாராளமா ஆர்டர் பண்ணுங்க, உங்க சாய்ஸை நான் பார்க்க ஆர்வமா இருக்கேன் ” என்று சஞ்சு சொன்னதும் ஆர்யனின் உதடுகளில் ஒரு நம்பிக்கையான புன்னகை தவழ்ந்தது. ” நான் என்ன தேர்வு பண்ணாலும் அது ரொம்ப ஸ்பெஷலா தான் இருக்கும் “ என்று அவஆர்யன் சொல்லும் பொது அவன் குரல் தன்னம்பிக்கையுடன் இருந்தது.

சஞ்சு மெல்ல சிரித்தாள். ” எனக்குப் பிடிச்சத நீங்க ஆர்டர் பண்றீங்களானு நானும் பாக்குறேன் “ என்று கூறினாள்.

அவர்களுக்கு தேவையான உணவை கொண்டுவர சொல்லி மேனேஜருக்கு ஒரு செய்தி அனுப்பிவிட்டு ஆர்யன் சஞ்சுவை பார்த்து சிரித்தான். உணவு பரிமாறப்படுவதற்காக அவர்கள் காத்திருந்த

சிறிது நேரம் கழித்து சஞ்சு மௌனத்தை கலைத்தாள். “ஆர்யன், நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்று அவள் கேட்ட போது அவள் குரலில் மென்மையும் ஆர்வமும் இருந்தது.

ஆர்யன் அவள் தோளை சுற்றி கையை வைத்து, “ என் கிட்ட நீ என்ன வேணும்னாலும் கேட்கலாம் அதுக்கு ஏன் இப்படி அனுமதி எல்லாம் கேட்டுட்டு இருக்க ? “ என்று கூறினான். ஆர்யன் சொன்னதை கேட்டு புன்னகைத்தாலும், சஞ்சு மீண்டும் பேசுவதற்கு முன் ஒரு கணம் தயங்கினாள். மெல்ல தொண்டையை கனைத்துக் கொண்டு, ” உங்க அப்பா அம்மாவைப் பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, அவங்கள பத்தி தான் கேட்க நெனச்சேன் .” என்று சஞ்சு சொன்னதும், அவனது பெற்றோரைப் பற்றிய குறிப்பு ஆர்யனின் முகபாவத்தை தடுமாறச் செய்தது. அவனது புன்னகை மறைந்து, ஒரு சொல்ல முடியாத துக்கம் அவன் முகத்தில் கடந்து சென்றது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி மேஜை மேல் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தான்.

சஞ்சு அவனை காயப்படுத்திவிட்டோமோ என்று மனதில் வருந்தினாள். அவன் முகம் வாடி போவதை பார்த்து அவன் கையை மெல்ல பிடித்தாள். 

” நான் ஒரே மகன், ” என்று பேசத் தொடங்கிய ஆர்யனின் குரல் மிகவும் நிதானமாக இருந்தது. ” நான் என்னோட பிசினஸ் விரிவுபடுத்துற  ஆரம்ப கட்டத்துல இருந்த அப்போ என் அப்பாவும், அம்மாவும் ஒரு விபத்துல இறந்துட்டாங்க அதனால நான் தனியா தான் இருக்கேன்.. என் அப்பா, அம்மா அவங்க குடும்பத்த எதிர்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணதால எனக்கு சொந்தம் யாரும் இல்ல. நான் யாரும் இல்லாம தனியா தான் இருக்கேன் “ என்று ஆர்யன் சொல்லி முடித்ததும்   சஞ்சுவின் முகம் அனுதாபத்தால் மென்மையானது. ” என்னை மன்னிச்சிடுங்க ஆர்யன். ஆனா நீங்க இப்போ தனியா இல்ல. உங்களுக்கு நான் இருக்கேன், இன்னொரு முறை நீங்க தனியா இருக்கீங்கனு சொல்லாதீங்க “ என்று சொன்ன சஞ்சு சற்றும் யோசிக்காமல் அவன் முகத்தை தன் கையில் பற்றி அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.

சஞ்சு அவனை அப்படி முத்தமிடுவது அதுவே முதல் முறை, ஆர்யன் அவனுக்குள் எதிர்பாராத ஒரு அரவணைப்பு, அன்பும் , ஆறுதலும் மனதில் படர்வதை உணர்ந்தான்.

” ரொம்ப நன்றி ஸ்வீட் ஹார்ட் “  என்று கிசுகிசுப்பான குரலில் ஆர்யன் சொன்னதும், “ ஏன் நன்றி சொல்றீங்க ? “ என்று கேட்டு சஞ்சு குழப்பத்தில் கண் சிமிட்டினாள்.

” என் கூட இருக்குறதுக்காக, அப்புறம் நீ இப்போ கொடுத்த முத்தத்துக்காக. எப்பவும் நான் தான் உன்ன கிஸ் பண்ணுவேன் ஆனா இன்னைக்கு முதல் முறை நீ என்ன கிஸ் பண்ணி இருக்க. இது ரொம்ப ஸ்பெஷல், இந்த நாள் நான் எப்பவும் மறக்கவே மாட்டேன் “ என்று ஆர்யன் உண்மையான அன்புடன் அவள் கண்களை பார்த்து சொன்னான்.   

சஞ்சு புன்னகைத்தபடி அவன் தோளில் சாய்ந்து அவன் கையை மென்மையாகப் பிடித்துக் கொண்டதும் இருவரும் ஒருவருக்கொருவர் சௌகரியமாக அமர்ந்திருந்தனர்.

விரைவில், அவளுக்கு பிடித்த பாஸ்தா மற்றும் க்ரீம் ப்ரூலி பரிமாறப்பட்டது, உணவைப் பார்த்ததும் சஞ்சுவின் முகம் உற்சாகத்தில் பிரகாசித்தது.

“ஆர்யன், எனக்கு இதெல்லாம் புடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும் ? “ என்று அஞ்சலி ஆச்சரியத்தில் கேட்க, ஆர்யன் ஆழமான  புன்னகையுடன் நாற்காலியில் சாய்ந்தான். ” நிச்சயமா உனக்கு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கா ? “ என்று அவன் கேட்டதும், அதற்கு சஞ்சு உடனே, “ ஹ்ம்ம், ஆமாம்.” என்று உறுதியாக சொன்னாள் ஆனால் ஆர்யன், “ இப்போ இல்ல ஆனா சீக்கிரம் சொல்றேன் “ என்று புன்னகையோடு சொன்னான் ஆனால் அவன் புன்னகையில் மர்மம் கலந்திருந்தது.

ஆர்யனின் வார்த்தையை கேட்ட சஞ்சு, ” எப்போ, என்ன கேட்டாலும் இப்படியே சொல்லுங்க. எப்போ தான் எனக்கு பதில் சொல்லுவீங்க ? “ என்று மெல்ல முனங்கினாள். 

” ரொம்ப சீக்கிரம் ஸ்வீட் ஹார்ட் “ என்று ஆர்யன் அவளுக்கு உறுதியளித்தான். சஞ்சு அதற்க்கு மேல் அவனை வற்புறுத்தாமல் அமைதியாக இருந்து விட்டாள்.

சுவையான உணவை ருசித்தபடி அவர்கள் தங்கள் மதிய உணவைத் தொடர்ந்தனர். மேனேஜர் உள்ளே நுழைந்து, “சார், இப்போ ஸ்வீட் கொண்டு வரட்டுமா ? “ என்று  பணிவுடன் கேட்டார்.

உடனே ஆர்யன் தயங்காமல், ” கொஞ்சம் ஜாமூன், ஐஸ்கிரீம் கொண்டு வாங்க- ப்ளாக் கரன்ட், பட்டர்ஸ்காட்ச்.” என்று அவன் சொன்னதும் உடனே சஞ்சு ஆர்யனை நோக்கித் திரும்பி கண்கள் விரிந்து அதிர்ச்சியில் பார்த்தாள். ” ஆர்யன் என்ன செய்றீங்க ? “ என்று அவள் கேட்க, “ நான் என்னமா  பண்ணேன் ? நமக்கு ஸ்வீட்ஸ் தான் கொண்டு வர சொன்னேன். ஏன் உனக்கு ஐஸ் கிரீம் வேணாமா ? “ என்று கேட்டு ஆர்யன் புன்னகைத்தான், அவன் குரல் விளையாட்டுத்தனமாக இருந்தது.  

ஐஸ் கிரீம் என்று சொன்னதும் அனைத்தையும் மறந்து “ ஆமா எனக்கு ஐஸ் கிரீம் வேணும் “ என்று சஞ்சு உடனே பதில் சொன்னாள். 

மேனேஜர் கிண்ணத்தில் ஜாமூன் மற்றும் ஐஸ் கிரீம் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்து விட்டு அறையில் இருந்து வெளியேறினார். ஆர்யன் ஜாமூனை எடுத்து சஞ்சுவுக்கு ஊட்ட, அவளும் அவனுக்கு ஊட்டினாள். சஞ்சு அவளது ப்ளாக் கரன்ட் ஐஸ் கிரீமை வழக்கம் போல ரசித்து சாப்பிட ஆரம்பித்தாள், ஆர்யன் தனது பட்டர்ஸ்காட்ச்சை சாப்பிட்டு கொண்டிருந்தான்.

அப்போது, ஆர்யனின் கண்கள், சஞ்சுவின் மூக்கு மற்றும் உதடுகளின் ஓரத்தில் இருந்த கொஞ்சம் ஐஸ்கிரீம் இருப்பதை மீது நிலைத்து நின்றன. அது அவனுக்குள் ஒரு ரொமாண்டிக் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது போல இருந்தது, அவனுக்குள் விளையாடி கொண்டிருந்த ஆசையின் உந்துதலைக் கட்டுப்படுத்த அவனால் முடியவில்லை. ஐஸ் கிரீம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ” சஞ்சு…” என்றான் மெல்லிய குரலில்.

சந்தோஷத்தில் திளைத்திருந்த சஞ்சு அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணத்தை பற்றி அறியாமல் அவன் பக்கம் திரும்பினாள். அவள் பார்வை அவன் கண்களைச் சந்தித்த கணத்தில் அவன் கண்களின் தீவிரத்தை அவள் கவனித்தாள். உடனே, அவனது பார்வையின் வெப்பத்தைத் தவிர்த்து அவள் கீழே பார்த்தாள்.

மெல்ல அவள் தாடையை பிடித்து தன் பக்கம் திருப்பிய ஆர்யன்  மெல்ல குனிந்து அவள் மூக்கிலும் உதட்டிலும் இருந்த ஐஸ்கிரீமை உதடுகளால் வருடி லாவி சுவைத்தான். ” ப்ளாக் கரன்ட் ஐஸ் கிரீம் கூட நல்லா ருசியா தான் இருக்கு,” என்று திருப்தியான புன்னகையுடன் முணுமுணுத்தவன், மீண்டும் தனது ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிடுவதைத் தொடர்ந்தான்.

சற்றே திகைத்துப் போன சஞ்சு அதில் இருந்து மீண்டு, “ அப்போ எனக்கும்  பட்டர்ஸ்காட்ச் வேணுமே “ என்று சொல்லி அவனைப் பார்த்து சிரித்தாள்.

சஞ்சுவின் வார்த்தையை கேட்டு ஆர்யனின் கண்கள் வியப்பில் விரிந்தன, ஆனால் அவன் எதுவும் சொல்வதற்குள் சஞ்சு அவன் காலரைப் பிடித்து இழுத்து ஆழமாக உணர்ச்சி பொங்க முத்தம் கொடுத்தாள். அவர்களின் உதடுகள் அவசரமாக சந்தித்தாலும், நீண்ட நேரம் முத்தமிட்டனர்.  இறுதியாக இருவரும் பின்வாங்கி சிவந்த கன்னங்களுடன் புன்னகைத்தனர்.

” உனக்கு பட்டர்ஸ்காட்ச் பிடிச்சிருக்கா, ஓகே வா  ?” என்று ஆர்யன் கண்களில் குறும்பு மின்னலுடன் கேட்டு கிண்டல் செய்ய, ” ஹ்ம்ம், புடிச்சு இருக்கு, டபுள் ஓகே” என்றாள் சஞ்சு விளையாட்டுத்தனமான புன்னகையுடன்.

************************************

முன்னோட்டம்:

இதுல என்ன பிரச்சனை இருக்கு ? நீ இப்போ நல்லா தூங்கினதும் நல்லது தான். நைட்டு நாம லேட்டா தூங்கலாம் “

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!