Home FamilyChapter 27

Chapter 27

by Siragugal Novels
21 views

கடந்த காலத்தை பற்றி ரஞ்சித் சொன்னதை கேட்டதும் சஞ்சு மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

“ ப்ளீஸ் அழாத சஞ்சு, நீ அழறத சார் தாங்கிக்க மாட்டாரு ” என்று ரஞ்சித் அவளிடம் கூறினான். அதன் பின்னர் ஒரு எண்ணை டயல் செய்து தனது மொபைலை அவளிடம் கொடுத்தான்.

” இதுவர நான் சொன்னது எல்லாம் பொய்னு கூட நீ நினைக்கலாம் ஆனா இவங்க கிட்ட பேசினா நான் சொன்னது எல்லாம் உண்மைன்னு உனக்கு புரியும், இந்தா பேசு “ என்று சொல்லி மொபைலை கொடுத்து விட்டு மறுவார்த்தை பேசாமல் அறையை விட்டு வெளியேறினான்.

சஞ்சு தன் கையில் இருந்த செல்போனை காதில் வைத்து லேசாக நடுங்கினாள். அவள் மெல்லிய குரலில் ஏறக்குறைய தயங்கியபடி “ஹலோ…” என்று சொன்னதும் ஒரு பழக்கமான குரல் பதிலளித்தது.

அந்த குரலை கேட்டதும் சஞ்சுவின் இதயம் படபடத்தது. ” கீர்த்தி? ” என்றாள் குழப்பத்துடன்.

“ஆமா சஞ்சு. நான் கீர்த்தி தான் பேசுறேன். நீ எப்படி இருக்க ? அப்புறம்  ஆர்யன் அண்ணா எப்படி இருக்காரு ?” என்று கீர்த்தி கேட்டதும் சஞ்சுவுக்கு ஆச்சரியமாக, அதே சமயம் அதிர்ச்சியாக இருந்தது.  

” உனக்கு ஆர்யன தெரியுமா ? “ என்று சஞ்சு கேட்க, கீர்த்தி மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள். “அவர எனக்கு நல்லாவே தெரியும். எப்பவும் உன் பின்னாடியே தான் சுத்திட்டு இருப்பாரு “ என்று சொல்லி கீர்த்தி சிரித்தாள். 

கீர்த்தி சொன்னதை கேட்டு மொபைலில் சஞ்சுவின் பிடி இறுகியது. ” நீ ஏன் என் கிட்ட அவர பத்தி சொல்லல ?” என்று சஞ்சு கேட்ட போது அவள் குரல் நடுங்கி, குழப்பமும் அமைதியான காயமும் கலந்த கலவையாக இருந்தது.

” அவர் தான் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு சஞ்சு. சரியான நேரம் வரும் போது அவரே உன் கிட்ட எல்லாத்தையும் சொல்றதா சொன்னாரு “ என்று கீர்த்தி சொன்னதும் சஞ்சு மௌனமானாள். அவளது இதயம் வலித்தது, அவளால் இனி அடக்க முடியாத உணர்ச்சிகளால் படபடத்தது. கீர்த்தி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, ஆர்யன் அவளுக்காக செய்த விஷயங்களை, அவன் அவளை கவனித்துக் கொண்ட விதம், அவளது பாதுகாப்பை உறுதி செய்த விதம், கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்திய போது, சஞ்சுவின் கண்ணீர் முதலில் மெதுவாகவும், பின்னர் சுதந்திரமாகவும் வழிந்தோடத் தொடங்கியது. கீர்த்தியின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு மென்மையான கத்தி போல அவளது குற்றவுணர்வையும் துயரத்தையும் கிழித்தெறிந்தது.

“ சரி, நீ எப்படி இருக்க ? அப்பா, அம்மா எப்படி இருக்காங்க ? “ என்று சஞ்சு கேட்டாள் அதற்கு கீர்த்தி உடனே, “ நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் சஞ்சு. உண்மைய சொல்லனும்னா ஆர்யன் அண்ணா தான் எங்களுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி கொடுத்தாரு. நாங்க பாதுக்காப்பா இருக்குறத கூட அவர் தான் உறுதி பண்ணாரு. இப்போ நாங்க நல்லா சந்தோஷமா இருக்கோம் “ என்று சொன்னாள்.    

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சுவால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவளுடைய இதயம் முன்னெப்போதையும் விட கனமாக உணர்ந்தது, ஆனால் இந்த முறை அது கோபமோ குழப்பமோ அல்ல, அது தூய்மையான, வலி மற்றும் வருத்தத்தால் நிறைந்திருந்தது.

சஞ்சு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ” சரி கீர்த்தி… டேக் கேர். நான் அப்புறம் பேசறேன்.” என்று சொல்ல, கீர்த்தியும், “ நீயும் நல்லா இரு, அப்புறம் ஆர்யன் அண்ணன கேட்டதா சொல்லு “ என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.  

கீர்த்தியிடம் பேசிய பின்பு சஞ்சு சில வினாடிகள் உறைந்து உட்கார்ந்திருந்தாள், அவளுடைய கண்கள் மீண்டும் கண்ணீரால் நிரம்பின, ஆனால் இந்த முறை அவளுடைய இதயம் வேறு வழியில் வலித்தது. அவள் கூரையைப் பார்த்தாள், மருத்துவமனை அறையின் சுவர்கள் மங்கலாக இருந்தன, அவளுடைய பார்வை கண்ணீரால் மங்கியது.

“ நீ என்ன லவ் பண்றியா ஆர்யன் ?அப்போ ஏன் என் கிட்ட சொல்லல ? நம்ம ரெண்டு பேரும் ஏன் இந்த கண்ணா மூச்சி ஆட்டம் விளையாடிட்டு இருக்கோம் ? நீ இல்லாம என்னால ஒரு வாழ்க்கைய வாழ முடியாது ஆர்யன். நீ என் மனசுல மட்டும் இல்ல, என் உயிருல கலந்து இருக்க, இந்த ஜென்மத்துல என்னால உன்ன விட்டு பிரிய முடியாது. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு. நான் உன்ன நிறைய கஷ்ட்டப்படுத்திட்டேன் ஆனாலும் நீ என்ன விட்டு போகவே இல்ல. என்னோட லவ் மொத்தமா உனக்கு தருவேன், உன்ன விட்டு போக மாட்டேன் “ என்று சொல்லி அவள் அழுத பொது கண்ணீர் மழையென விழுந்து கீழே இருந்த தலையணையை நனைத்தது. கைகளில் முகம் புதைத்து மெல்ல விம்மி விம்மி அழுதாள்.

அவளது உணர்ச்சிகளின் தீவிரம் அவளை மன அழுத்தத்தில் மூழ்கடித்தது. கடுமையான தலைவலி வர ஆரம்பித்து தலையை பிடித்துக் கொண்டு மேலும் பலமாக அழுதாள். அவளது துயரம் உடல் வலியாக வெளிப்படுவது போல அவளது நெற்றிப் பொட்டுகள் துடித்தன. அவள் வலியில் முனகியபடி தன்னைத்தானே ஆட்டிக்கொண்டாள்.

அந்த நேரத்தில் கதவு திறந்து ரஞ்சித், கௌசல்யாவுடன் உள்ளே நுழைந்தான். தங்களுக்கு முன்னால் கண்ட காட்சியைக் கண்டு அவர்கள் கண்கள் பீதியில் விரிந்தன.

“சஞ்சு!” என்று பதறி கூப்பிட்டபடி அவள் பக்கத்தில் ஓடி சென்றான்  ரஞ்சித். சஞ்சு சுருண்டு தலையைப் பிடித்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தாள்.

கௌசல்யா அவள் முதுகில் மென்மையாக கை வைத்து, “சஞ்சு, என்ன ஆச்சு ? ஏன் இப்படி அழற ?” என்று கவலையோடு கேட்டார். அவள் நிலை மோசமாவதை பார்த்த ரஞ்சித் ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் மொபைலை எடுத்து டாக்டரை அழைத்தான்.

சில நிமிடங்களில், டாக்டர் அறைக்கு வந்து அவளது நிலையை பரிசோதிக்க ஆரம்பித்தார்.

” இவங்களோட ஸ்ட்ரெஸ் லெவல் ரொம்ப அபாயகரமா இருக்கு” என்று ரஞ்சித்தின் பக்கம் திரும்பினார் டாக்டர். ” இவங்க  கடுமையான மன உளைச்சலுல இருக்காங்க. இப்போதைக்கு நான் இவங்களுக்கு லேசான மயக்க மருந்து கொடுக்குறேன் ஆனா இத நாம் தொடர்ந்து செய்ய முடியாது. இந்த மருந்து அடிக்கடி கொடுத்தா உடம்புக்கு நல்லது இல்ல. ஆர்யன் சார் கிட்ட சொல்லி இவங்கள பாத்துக்க சொல்லுங்க.   இவங்க மனச அமைதியா வெச்சுக்க சொல்லுங்க “ என்று டாக்டர்  சொன்னதை கேட்ட ரஞ்சித் வேகமாக தலையசைத்து, “புரியுது டாக்டர். நான் அவர்கிட்ட பேசறேன்.” என்றான்.

மருத்துவர் ஊசி போட்ட பிறகு, சஞ்சுவின் சுவாசம் மெதுவாகத் சீரடைய தொடங்கியது. மருந்து வேலை செய்த போது அவள் கண் இமைகள் படபடத்தன.

ரஞ்சித் அவள் அருகில் அமர்ந்து, உடைந்து போன குழந்தையை ஆறுதல்படுத்த முயலும் அண்ணனைப் போல, “தயவு செஞ்சு அதிகம் யோசிக்காத சஞ்சு. உன் உடம்பு இப்போ இருக்க நிலையில இது நல்லது இல்ல . ப்ளீஸ் மா, கொஞ்சம் ரெஸ்ட் எடு “ என்று மென்மையான குரலில் கூறினான்.    

சஞ்சு மெதுவாக கண்களை மூடினாள் அதே நேரம், “ அண்ணா .. ஆர்யன் .. ஆர் … ஆர்யன் “ என்று மயக்க நிலையில் முனகினாள்.

அத்துடன், தூக்கம் அவளது பலவீனமான உடலை ஆட்கொண்டது. ஆனால் அந்த மூடுபனியிலும் அவன் பெயர் அவள் உதடுகளில் ஒரு நம்பிக்கையாக, மங்க மறுத்த ஒரு ஏக்கமாக நிலைத்திருந்தது.

இதற்கிடையில், ஆர்யன் ஒரு அமைதியற்ற ஆத்மாவைப் போல லிவிங் அறையில் நடந்து கொண்டிருந்த போது அவனது மொபைல்  ஒலித்தது. ரஞ்சித்தின் பெயரை பார்த்ததும் சற்றும் யோசிக்காமல் உடனே பதில் சொன்னான்.

“ரஞ்சித், சஞ்சு இப்போ எப்படி இருக்கா ?” என்று ஆர்யன், குரலில் கவலை தொனிக்க கேட்டான்.

“சார், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டாக்டர் அவள செக் பண்ணாரு. சஞ்சு இன்னும் அதிக மன அழுத்தத்துல இருக்கானு சொன்னாரு. இத இப்படியே தொடர முடியாதுனு சொன்னாரு “ என்று ரஞ்சித் சொன்னதை கேட்டதும் ஆர்யனின் இதயம் துடித்தது. கால்கள் தளர்ந்து தரையில் சரிந்தான், நெஞ்சை நகத்தால் கவ்விய ஒரு இயலாமையை உணர்ந்தான்.

மறுமுனையில் நிலவிய மௌனத்தை உணர்ந்த ரஞ்சித் மெல்ல, “ சார் “ என்று அழைத்தான். ” ம்…சொல்லு ரஞ்சித்” என்று முணுமுணுத்த ஆர்யன் தன்னை சமாளித்துக் கொள்ள முயன்றான்.

” டாக்டர் அவள அமைதிப்படுத்த ஊசி போட்டாரு ஆனா ஒவ்வொரு முறையும் இத செய்ய முடியாதுனு சொன்னாரு. “ என்று ரஞ்சித் மெல்லிய குரலில் கூறியதும், “ இப்போ தூங்கிட்டாளா ? “ என்று ஆர்யன் கவலையுடன் கேட்டான்.  

“ஆமா சார் ஆனா… அவ உங்க பெயர சொல்லிட்டே இருந்தா. மயக்கத்துல கூட உங்க பெயர தான் திரும்ப திரும்ப சொல்லிட்டே இருந்தா “ என்று ரஞ்சித் சொனந்தும், “ என் பெயர சொன்னாளா ?” என்று அதிர்ச்சியான குரலில் கேட்டான் ஆர்யன்.

“ஆமா சார். அவ உங்க பெயர தான் முணுமுணுத்துட்டே இருந்தா “ என்று ரஞ்சித் மீண்டும் சொன்னதும் ஆர்யன் மறுவார்த்தை பேசாமல் சாவியை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி விரைந்தான்.

“ நான் அங்க வரேன் “ என்று சொல்லி அழைப்பை துண்டித்து, காரை வேகமாக ஒட்டி மருத்துவமனைக்கு சென்றான். 

ஆர்யன் சஞ்சுவின் அறைக்குள் உள்ளே நுழைந்த போது அறை மங்கலாகவும் நிசப்தமாகவும் இருந்தது. கன்னங்களில் காய்ந்த கண்ணீரால் கறை படிந்திருக்க, படுக்கையில் சுருண்டு கிடந்த சஞ்சுவின் மீது அவன் பார்வை விழுந்தது. அவன் மெதுவாக அவளிடம் சென்று அவள் பக்கத்தில் அமர்ந்தான், அவன் கை மெதுவாக அவள் தலைமுடியை கோதியது, மற்றொரு கை அவளது பலவீனமான கையைப் பிடித்தது.

“சஞ்சு மா, ப்ளீஸ் இப்படி இருக்காத. என்னால உன்ன இப்படி பார்க்க முடியாது. தயவு செஞ்சு என்ன நம்புடி, உனக்காக என்ன வேணும்னாலும் செய்ய நான் தயாரா இருக்கேன் ஆனா என்ன வெறுத்து ஒதுக்காத. சண்ட போடு ஆனா என் கண்ணு முன்னாடியே இருடி “ என்று சொன்ன பொது ஆர்யன் குரல் கவலையில் தடித்தது.

அப்போது, ரஞ்சித்தும், கௌசல்யாவும் ஒரு தட்டில் உணவுடன் உள்ளே நுழைந்தனர்.

” சார், நீங்க நேத்துல இருந்து எதுவும் சாப்பிடல. ப்ளீஸ், கொஞ்சம் சாப்பிடுங்க.” என்று ரஞ்சித் மெதுவாக சொன்னான் ஆனால் ஆர்யன் சஞ்சுவின் மீது இருந்து அவன் பார்வையை விலக்காமல், “ எனக்குப் பசிக்கல. எடுத்துட்டு போ ரஞ்சித்” என்றான்.

“சார், நீங்க சஞ்சனாவ கவனிச்சுக்கணும்னா நீங்க ஆரோக்கியமா இருக்கணும். உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அப்போ சஞ்சுவ யார் பாத்துக்குவா ? “ என்று ரஞ்சித் கூறினான் ஆனால் ஆர்யன் அமைதியாக இருந்தான். 

” சார், எனக்கு உங்கள பல வருஷமா தெரியும். உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும் அதனால கவலைப்படாதீங்க. இப்போ கொஞ்சம் சாப்பிடுங்க “ என்று கௌசல்யா அவருடைய அன்பான குரலில் சொல்லும் போது அவருடைய தாய்மை உண்மையாக தெரிந்தது.     

திடீரென்று சஞ்சு தூக்கத்தில் அசைந்தாள். அவள் உதடுகள் துடிக்க, அவள் மெல்ல முனக ஆரம்பித்தாள், “ஆர்யன்… ஆர்யன்… ப்ளீஸ் என்னை விட்டுட்டு போயிடாத…” என்று அவள் முனகுவதை பார்த்ததும் ஆர்யனின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் இன்னும் நெருக்கமாக குனிந்து, அவளுடைய கன்னங்களைக் பற்றி அவளை அமைதிப்படுத்த மென்மையாகத் தட்டினான் ஆனால் அவள் அவனுடைய பெயரைக் கூப்பிட்டு கொண்டே இருந்தாள். அவளை சமாதானப்படுத்த விரும்பிய அவன், “சஞ்சு… சஞ்சு, என்னைப் பாரு. இதோ வந்துட்டேன் பேபி ” என்று சொல்லி  அவளை எழுப்ப முயன்றான்.

இடைவிடாத, கெஞ்சும் குரலாக இருந்த அவனது குரல் இறுதியாக அவளை அடைந்தது. அவள் கண்கள் குழப்பத்துடனும் கண்ணீருடனும் திறந்து அவன் மீது விழுந்தன.

“ஆர்யன்…” என்று சஞ்சு அவனை மெல்லிய குரலில் அழைத்ததும், “ இதோ நான் இங்க தான் இருக்கேன் சஞ்சு ” என்றவன் அவள் தலைமுடியை மெல்ல கோதிவிட்டான்.

“ஆர்யன்… என்ன மன்னிச்சிடுங்க, தயவு செஞ்சு என்ன விட்டு போகாத ” என்று சஞ்சு கதறி அழுதாள்.

” உன்ன விட்டுட்டு நான் எங்க போவேன்? நான் இங்க தான் இருக்கேன் சஞ்சு மா ” என்றவன் அவளை கவனமாக அணைத்துக் கொள்ள, அவள் அவனை நெருங்கி அவனை இறுகப் பற்றிக் கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

“ தயவு செஞ்சு அழாத சஞ்சு. நீ இப்படி அழும் போது என்னால தாங்க முடியாது.” என்று ஆர்யன் சொல்ல, “ நான் அழல, ஆனா நீ இங்கேயே இருப்பனு சொல்லு ” என்று சொல்லி அவள் மூக்கை உறிஞ்சினாள்.

” நான் எப்பவும் உன் கூட தான் இருப்பேன். நீயே போக சொன்னாலும் போக மாட்டேன் “ என்று ஆர்யன் சொன்னதும் “ ரொம்ப நன்றி “ என்றாள் சஞ்சு.

ஆர்யன் அணைப்பில் இருந்து பின்வாங்கி அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி அவள் நெற்றியில் முத்தமிட்டான், அவன் உதடுகள் அங்கேயே நீடிக்க, அவள் மெல்லிய புன்னகையுடன் அவன் காலரைப் பிடித்தாள்.

” நீ எவ்ளோ வேணும்னாலும் சண்ட போடு ஆனா என்ன விட்டு போகாத “ என்று ஆர்யன் சொன்னதும் அவள் மெதுவாக பின்வாங்கினாள்.   ” நான் நிறைய சண்ட போடனும் ஆனா முதல்ல எனக்கு குடிக்க தண்ணி வேணும், எனக்கு தொண்டை வறண்டு இருக்கு “ என்று சொல்லும் போது அவள் கண்கள் இன்னும் ஈரமாக இருந்தன.  

தண்ணீர் எடுள்ள ஆர்யன் வேகமாக எழுந்து நின்றான் அப்போது தொடாமல் இருந்த உணவு தட்டை கவனித்தாள் சஞ்சு. ஆர்யன் அவளிடம் குடிக்க தண்ணீர் கொடுத்த பொது அவள் அவனை ஒரு பார்வை பார்த்து தடுத்தாள்.

” என்ன ஆச்சு? தண்ணி குடி ” என்று ஆர்யன் சொல்ல, “  நீ ஏதாச்சும் சாப்பிட்டியா  ஆர்யன்?” என்று சஞ்சு அவனை கேட்டாள்.

” ஹ்ம்ம், நான் சாப்டேன், நீ முதல்ல தண்ணி குடி “ என்று ஆர்யன் சொல்லும் போது அவன் போய் சொல்கிறான் என்று புரிந்து கொண்டு, ” ரஞ்சித் அண்ணாவ கூப்பிடு ” என்றாள்.

” ஏன் ? ” என்று கேட்டு ஆர்யன் புருவத்தை சுருக்கினான்.

” ஏன்னா நீ என்கிட்ட உண்மையை சொல்ல மாட்ட. அதனால நான் அவர் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்குறேன் “ என்று சஞ்சு கூறினாள். 

ஆர்யன் பெருமூச்சு விட்டு தோற்றுப் போனான். ” சரி. நேத்துல இருந்து நான் இன்னும் சாப்பிடல “ என்று அவன் சொன்னதும், “ முதல்ல நீ சாப்பிடு அதுக்கு அப்புறம் எனக்கு குடிக்க தண்ணி கொடு “ என்றாள் சஞ்சு.  

“சஞ்சு…” என்று ஆர்யன் ஆரம்பித்தான் ஆனால் சஞ்சு அவனை முறைத்து, “  முடியாது  மிஸ்டர் ஆர்யன்” என்று கடுமையாக அவனை இடைமறித்தாள்.

தன்னையும் மீறி புன்னகைத்த ஆர்யன், “ கடவுளே! நீ ஆர்யன் சொல்லி திரும்ப கேட்க எப்படி இருக்கு தெரியுமா ? நேத்து மிஸ்டர் சைதன்யா சொல்லி என்ன அப்படியே கொன்னுட்ட “ என்று சொன்னான். அதற்கு சஞ்சு உடனே, “ இப்போ மட்டும் நீ சாப்பிடல அப்புறம் நிரந்தரமா மிஸ்டர் சைதன்யா தான் “ என்று மிரட்டினாள்.  

“ அய்யையோ வேணாம் வேணாம், நான் இப்போவே சாப்பிடுறேன் “ என்று சொல்லி ஆர்யன்  தட்டை எடுத்துக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தான். முதலில் ஒரு ஸ்பூன் உணவை மெதுவாக அவளிடம் நீட்டினான், பிறகு தானும் சாப்பிட ஆரம்பித்தான். 24 மணி நேரம் நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது உணவுக்காக மட்டும் அல்ல அவர்களின் ஏக்கத்தும் தான்.

*************************************

முன்னோட்டம்:
“முத்தம் கொடுக்குறதால மன அழுத்தம் குறையுமாம் அப்படினு பவி சொன்னா”

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!