Home FamilyChapter 72

Chapter 72

by Siragugal Novels
10 views

கீர்த்தியும் பவியும் வீட்டை அடைந்து சோபாவில் அமர்ந்ததும்,  கீர்த்தியின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.

“அப்போ ஓகே ஆயிடுச்சா ? மேடம் இனிமே பிஸியா தான் இருப்பீங்க. அப்புறம் எங்களுக்கு நேரம் கிடைக்குமா ? “ என்று பவி கிண்டல் செய்ததும், “ஓ அப்படியா? உன் ரகசிய பாய்ப்ரெண்ட பத்தி எப்போ சொல்ல போற ? “ என்று கேட்டு கீர்த்தி சிரித்தாள்.

“ ஏய், அப்படி எதுவும் இல்லை” என்று பவி திக்கி திணறினாள். அதை பார்த்து, “ அப்புறம் ஏன் நீ பதட்டப்படுற ? ஒழுங்கா சொல்லு, யாரு அந்த ஆளு ? “ என்று கேட்டு கீர்த்தி கொஞ்சம் மிரட்டினாள். ஆனால் பவி அதற்கு, “ சும்மா இப்படி ஏதாவது உளறிட்டு இருக்காம போய் டின்னருக்கு போக ரெடியாகு “ என்று சொல்லி பேச்சை தவிர்த்தாள்.

” பேச்ச மாத்தாத, ஒழுங்கா அது யாருன்னு சொல்லு “ என்று கீர்த்தி மீண்டும் கேட்டதும், பவி கண்களை உருட்டி விட்டுக்கொடுத்தாள். “சரி, நான் சொல்றேன், ஆனா இப்போ இல்ல. நேரம் வரும் போது கண்டிப்பா சொல்றேன். சரி எப்போ சஞ்சு கிட்ட சொல்லப் போறீங்க?” என்று கேட்டாள்.

” புது காஸ்மெடிக் வெளியீட்டுக்கு அப்புறம் அவள நேர்ல சந்திச்சு சொல்லலாம் “ என்று என்று கீர்த்தி சொல்ல பவி சரி என்று தலை அசைத்தாள்.

அன்று இரவு, பிரதீப் கீர்த்தியை இரவு உணவுக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் ஒன்றாக நீண்ட நேரம் செலவிட்டனர், பேசினர், தங்கள் மனதில் இருந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வாரம் கடந்து சென்று, புதிய காஸ்மெடிக் அறிமுகத்திற்கு  ஒரு நாள் முன்பு, ஆர்யன் சந்திரசேகரை ரகசியமாக அழைத்து, அவனது ஹோட்டலில் ஒரு தனிப்பட்ட சந்திக்க அழைத்தான். சந்திரசேகரும் சம்மதித்து ஆர்யனின் ஹோட்டலுக்கு சென்றதும். ரஞ்சித் அவரை ஆர்யனின் தனி அறைக்கு அழைத்துச் சென்றான்.

” ஹலோ சார், வாங்க ” என்று வரவேற்றான் ஆர்யன்.

சந்திரசேகர் உட்கார்ந்து, ” இப்போ இந்த திடீர் ரகசிய சந்திப்புக்கு என்ன காரணம்?” என்று நேராக விஷயத்துக்கு வந்தார்.

ஆர்யன் அதற்கு பதில் சொல்லாமல், ஒரு ஆடியோ பதிவை இயக்கினான், அதில் மாயாவின் குரல் ஒலித்தது. அவள் புதிய காஸ்மெடிக் மாதிரிகளை அபாயகரமான இரசாயனங்களுடன் கலப்படம் செய்வதற்கான திட்டங்களை விவாதித்தது, மற்றும் அவள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளை சந்திக்கும் வீடியோ பதிவுகளையும் ஆர்யன் காட்டினான்.

” உங்கள எதுக்கு சந்திக்க வர சொன்னேன்னு இப்போ உங்களுக்கு காரணம் புரிஞ்சி இருக்கும்னு நம்புறேன் “ என்று ஆர்யன் கூறியதும், சந்திரசேகர் தான் கண்ட காட்சியின் கனத்தை தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தார்.

” நான் இத நம்ம ரெண்டு பேருக்கும் பிரச்சன இல்லாத மாதிரி செய்றேன் அதுக்கு உங்க பொண்ணு அவளோட எல்லா திட்டத்தையும் நிறுத்தனும். என்னோட புது காஸ்மெடிக் வெளியீடு நிகழ்ச்சியில தலையிடாம இருக்க சொல்லுங்க. அதுக்கு அப்புறம் நாம விவரமா பேசுவோம் “ என்று ஆர்யன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் எச்சரிக்கை தெளிவாக இருந்தது.

” அதுக்கு அப்புறம் உன்னோட திட்டம் என்ன ? “ என்று சந்திரசேகர் அமைதியாக கேட்டார். ஆனால் ஆர்யன் அதற்கு, “ அத பத்தி அப்புறம் பேசுவோம். இப்போதைக்கு, இந்த ஆதாரங்கள் என்கிட்ட இருக்கும் “ என்று சொன்னான்.

” நம்ம பார்ட்னர்ஷிப் முடிவுக்கு கொண்டு வந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். நீ என்ன சொல்றே ? “ என்று சந்திரசேகர் கேட்க, ஆர்யன் லேசாக தலையசைத்தான். ” உங்க பொண்ணோட தந்திரம் எதுவும் இல்லாம வெளியீடு வெற்றிகரமா நடந்தா நான் அத பத்தி யோசிப்பேன்.” என்று திட்டவட்டமாக கூறினான்.

“சரி. அப்படி நடக்காம நான் பார்த்துக்குறேன் “ என்று சொன்ன சந்திரசேகர் உடனடியாக வீடு திரும்பி மாயாவை அழைத்தார்.

அவர் பரபரப்புடன், வழக்கத்திற்கு மாறான பதற்றத்துடன் இருப்பதை கண்டு குழம்பிய மாயா, “அப்பா, என்ன ஏன் கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள்.

“என்ன செய்ற மாயா?” என்று அவர் உடனே உறுமினார்.

“இப்ப என்ன பேசறீங்க? தெளிவா சொல்லுங்க.” என்று மாயா கேட்டதும், ” காஸ்மெடிக் வெளியீட்ட நாசப்படுத்த நீ திட்டம் போட்டதுக்கு எல்லா ஆதாரமும் ஆர்யன் கிட்ட இருக்கு. நான் பலமுறை சொல்லி இருக்கேன், தனிப்பட்ட விஷயங்களை வியாபாரத்துல இழுக்காதனு, எப்போ என் பேச்ச கேட்கப் போற ?” என்று சந்திரசேகர் கர்ஜித்தார் ஆனால் மாயா அமைதியாக இருந்தாள்.

” நான் உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன் மாயா, வாய திறந்து இப்ப பதில் சொல்லு.” என்று சந்திரசேகர் கேட்க, “அப்பா, நான் சஞ்சனாவ வீழ்த்த விரும்புறேன் இல்ல அவள கொல்ல விரும்புறேன்.” என்று மாயா சீறினாள். அவள் வார்த்தையை கேட்டதும், “ஏன் இப்படி வெறி பிடிச்சிருக்க ? நீ இப்படி நடந்துக்குவனு நான் நினைக்கவே இல்ல” என்று அவர் ஏமாற்றத்துடன் சொன்னார்.

“நான் ஆர்யன லவ் பண்றேன். நான் எது செய்தாலும் அது அவருக்காகத் தான். எனக்கு பிசினஸ் பத்தி கவலை இல்லை.” என்று மாயா சொன்னதும், “வாய மூடு, மாயா. எல்லாத்தையும்  இழந்த அப்புறம் நீ என்ன செய்வ ? ஒரு கோடீஸ்வரனோட மகளா உன்ன திரும்பி கூட பார்க்காத ஆர்யன் ஒரு பிச்சைக்கார மாயாவ லவ் பண்ணுவான்னு நினைக்குறியா ? உடனே உன் ஆளுங்க எல்லாரையும் கூப்பிட்டு உடனே எல்லாத்தையும் நிறுத்து ” என்று சந்திரசேகர் உத்தரவிட்டார் ஆனால் மாயா அவரிடம், “என்ன மன்னிச்சிடுங்க அப்பா.” என்று சொல்லி மறுத்துவிட்டாள்.

“இத இப்போ நிருத்தலனா அப்புறம் நீ ஜெயிலுக்கு தான் போவ. ஆர்யன் நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போடுவான். நம்ம பிசினஸ் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையுறத நான் விரும்பல. நான் சொல்றத மட்டும் செய்.” என்று சந்திரசேகர் கடும்கொவத்தில் கத்தினார்.

மாயா தன் அப்பா இவ்வளவு கோபமாக இருப்பதைப் பார்ப்பது அதுவே முதல் முறை. அவள் உடனடியாக கீழ்ப்படிந்து, தனது ஆட்களை அழைத்து அனைத்து திட்டங்களையும் ரத்து செய்யுமாறு தனது தந்தையின் முன்னால் பேசினாள்.

“இப்போ காஸ்மெடிக் வெளியீடு முடியுற வரை வீட்லயே இரு. என் அனுமதி இல்லாம வெளியே போக கூடாது. இது என் உத்தரவு” என்று உறுமிவிட்டு வெளியேறினார்.

அடுத்த நாள், ஆர்யனும், சஞ்சுவும் வெளியீட்டிற்கு தயாரானார்கள். சஞ்சு அணிந்திருந்த கவுன், கொஞ்சமாக வளர்ந்திருந்த வயிற்றை மறைத்தது. முழு பாதுகாப்புடன், அவர்கள் தனியார் லிப்ட் வழியாக அலுவலகத்தை அடைந்தனர்.

மீட்டிங் அறைக்குள், அனைத்து நிர்வாகிகளும் ஒன்று கூடினர். சஞ்சனா வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்திய பிறகு பிரதீப் ஊடகங்களில் உரையாற்றினான்.

சந்தையில் புதிய தயாரிப்பு மாபெரும் வெற்றியைப் பெற்றது. தனது யோசனைகள் இவ்வளவு சிறப்பாக செயல்படுத்தப்பட்டதைக் கண்டு சஞ்சு சிலிர்த்துப் போனாள். அதில் பணியாற்றிய அனைவருக்கும் அவள் நன்றி தெரிவித்தாள். பவியும், கீர்த்தியும் அவளைக் கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்னார்கள் அப்போது ஆர்யன் அவர்களை மேன்ஷனில் சடங்குக்கு அழைத்தான்.

” ஒருவழியா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணி நாளைக்கு கொண்டாட நமக்கு நேரம் கிடைக்கும் “ என்று பவித்ரா சொல்ல, ” ஆமா, நீங்க சீக்கிரம் வந்துடுங்க “ என்று சஞ்சு புன்னகைத்தாள்.

பின்னர், சஞ்சு மற்றும் ஆர்யன் வீட்டிற்கு புறப்பட்டனர், பிரதீப், கீர்த்தி மற்றும் பவி ஆகியோர் தயாரிப்பு மதிப்புரைகளை கண்காணிக்க அங்கேயே தங்கினர்.

” என்ன மேடம் சந்தோஷமா இருக்கீங்களா?” என்று ஆர்யன் கேட்க, “ரொம்ப சந்தோஷம். ரொம்ப தேங்க்ஸ்.” என்றாள் சஞ்சு.

” உனக்காக எதுவும். செய்வேன், இப்போ வேலை முடிஞ்சிடுச்சு. மீதம் இருக்க வேலைய பிரதீப் பார்த்துக்குவான். நீ வீட்ல நல்லா ரெஸ்ட் எடுக்கலாம் “ என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு அவன் வார்த்தையை மறுக்கவில்லை.

இதற்கிடையில், தயாரிப்பின் மிகப்பெரிய வெற்றியைப் பற்றி ஆஷா  கூறியதை கேட்டதும் மாயா கோபமடைந்தாள். சந்தையில் கிடைத்த நேரடி விமர்சனம், அதன் மதிப்புரைகள் எல்லாம் புதிய தயாரிப்பை மிகவும் பாராட்டின. மேலும் சந்தையில் ARCயின் பங்கு மதிப்பு உயர்ந்தது. அதே நேரத்தில், ஆர்யனின் பொறியியல் கல்லூரி திட்டம் ஏற்கனவே தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவனது கட்டுமானத் தொழில் உச்சத்தை எட்டியது, அவன் காலடி வைத்த ஒவ்வொரு துறையிலும் ஒரு ஆதிக்கம் செலுத்தும் நபராக அவனது இடத்தை உறுதிப்படுத்தியது.

அடுத்த நாள், ஆர்யனும் சந்திரசேகரும் மீண்டும் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். ஆர்யனின் அறையில் அந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதீப், ரஞ்சித், ஏ.ஆர்.சி.யின் ஆராய்ச்சி தலைவர் மற்றும் ஆர்யனின் வழக்கறிஞர் ஆகியோர் ஆர்யனுடன் இருந்தனர். சந்திரசேகர், ராஜேஷ் மற்றும் அவரது சட்டக் குழுவினருடன் இருந்தார். இரு தரப்பினரும் எதிரெதிரே அமர்ந்திருந்ததால் சூழ்நிலை பதற்றமாக இருந்தது.

” சார், இவர் நம்ம ஆராய்ச்சித் தலைவர், நாம விவாதத்த தொடங்குறதுக்கு முன்னாடி நீங்களும் உங்க வக்கீலும் இவர் சொல்றத கேளுங்க. அதுக்கு அப்புறம் நாம் பேசுவோம் “ என்று ஆர்யன் சொன்னதும், ஆராய்ச்சித் துறை தலைவர் எழுந்து நின்று அறையில் உரையாற்றினார். ” மாயா மேடம் எஎனக்கு தனிப்பட்ட முறையில போன் பண்ணாங்க. புது காஸ்மெடிக் வெளியீட்ட நாசப்படுத்த அவங்க எனக்கு பணம் கொடுத்தாங்க. “ என்று சொன்னவர், “ இது தான் அவங்க எனக்குக் கொடுத்த பணம் ” என்று சொல்லி எல்லோரும் பார்க்கும்படி பணத்தை மேஜை மீது வைத்தார்.

சந்திரசேகர் கண்களைச் சுருக்கி, “மாயாவுக்கு உங்க அறிமுகம் எப்படி கெடச்சுது ? “ என்று கேட்டார்.

பிரதீப் லேசாக கையை உயர்த்தினான். “நான் தான் அவருக்கு மாயாவ அறிமுகம் பண்ணேன். நான் அப்படி செய்யாம இருந்திருந்தா, அவங்க வேற யாரையாவது வெச்சு இந்த திட்டத்த செயல்ப்படுத்தி இருப்பாங்க அதனால இந்த திட்டம் அவங்களுக்கு எதிரா இருக்க நான் இப்படி பண்ணேன். புரியும்படி சொல்லனும்னா இந்த தயாரிப்ப வெற்றிகரமா அறிமுகப்படுத்துற வரை எங்களுக்காக வேலை செய்ய நாங்க இவர மாயாவுக்கு வேலை செய்ய நடிக்க சொன்னோம் “ என்று விளக்கமாக கூறினான்.

தனது ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னர், ஆராய்ச்சித் தலைவர் பாதுகாப்புடன் அறையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

” இப்போ நாம பேசுவோம் “ என்று சொன்ன ஆர்யன், பிரதீப் பக்கம் திரும்பி, ” பிரதீப், எல்லாத்தையும் விவரமா சொல்லு “ என்றான்.

பிரதீப் ஒரு ஃபைலை வேண்டுமென்றே சந்திரசேகருக்கு எட்டாத இடத்தில் மேஜை மீது வைத்தான். அதை பார்த்ததும், ” என் இது?” என்று சந்திரசேகர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த பிரதீப், ” மாயா, நான் அவங்களுக்காக வேலை செய்ய அவங்களோட பங்குகள என் பெயருக்கு மாத்தி கொடுத்த டாகுமென்ட்ஸ் இதுல இருக்கு “ என்று பிரதீப் பதிலளித்ததும், “ புல்ஷிட்.” என்று சந்திரசேகர் கத்தினார்.

” இது தான் உண்மை. இப்போ டிசி குழுமத்தோட 40% பங்கு என்கிட்ட இருக்கு. அதாவது நான் உங்க சாம்ராஜ்யத்தோட போர்டு ஆப் டைரக்டர்ஸ், உறுப்பினரா இருக்க முடியும். அது சரி தானே சார்?” என்று பிரதீப் கேட்டதும், சந்திரசேகரின் வக்கீல் தயக்கத்துடன் ஆம் என்று தலையசைத்தார்.

” நல்லது. இப்போ இந்த பார்ட்னர்ஷிப் அக்ரீமென்ட் பத்தி பேசுவோம். நம்ம ரெண்டு தரப்புல இருந்து யார் ஒருத்தர் பிசினஸ்ஸுக்கு எதிரான நடவடிக்கையில ஈடுபடுறாங்களோ அவங்க இந்த பார்ட்னர்ஷிப்ல பண்ண முதலீட்டை இழக்க நேரிடும், அது மட்டும் இல்ல 100 கோடி இழப்பீடு கொடுக்கணும்னு தெளிவா சொல்லி தான் அக்ரீமென்ட் கையெழுத்து போட்டு இருக்கோம். மாயா பண்ண எல்லா நாச வேலைக்கும் உறுதியான ஆதாரம்  எங்ககிட்ட இருக்கு அதனால டிசி குழுமதுக்கு இனி ஏஆர்சி காஸ்மெடிக்ஸ் பிசினஸ்ல எந்த உரிமையும் இல்ல, நீங்க முதலீடு பண்ண தொகையும் திரும்ப கிடைக்காது. அக்ரீமென்ட்படி இன்னும் பத்து நாளுக்குள்ள நீங்க 100 கோடிய ARCக்கு கொடுக்கணும். “ என்று விலக்கிய பிரதீப் மீண்டும் சந்திரசேகரின் வக்கீலை பார்த்து, “ நான் சொல்றது சரி தானே வக்கீல் சார் ?” என்று கேட்டான்.

வக்கீல் மீண்டும் ஆன் என்று தலையசைத்தார்.

“ என் பிசினஸ் மொத்தமா இழுத்து மூடிடுவனு மிரட்டுறியா ?” என்று கேட்டு சந்திரசேகர், ஆர்யனை முறைத்தார்

” சார், நான் இன்னும் உங்கள மதிக்கிறேன், எப்பவும் மதிப்பேன். இப்போ இருக்க நிலமைய பிரதீப் உங்களுக்கு எடுத்து சொல்லி இருக்காரு “ என்று ஆர்யன் அமைதியாக கூறினான். 

சந்திரசேகர் பெருமூச்சு விட்டார். “சரி. பார்ட்னர்ஷிப்ப நிறுத்த நீ எனக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் கொடுத்ததும் நான் குறிப்பிட்ட நேரத்துக்குள்ள உனக்கு எல்லாத்தையும் செட்டில் செய்றேன் ” என்று கூறினார்.

ஆர்யன் முன்னால் மேஜை மேல் கை வைத்தபடி, “ சார், இப்போ நீங்க சொன்ன வழியில நாம செய்ய நெனச்சா நீங்க எல்லாத்தையும் இழந்துடுவீங்க. நான் அதை விரும்பல.” என்று கூறினான் அதற்கு சந்திரசேகர் “ சுத்தி வளைக்காம நேரடியா பேசு “ என்று சொன்னார்.

” பிரதீப் கிட்ட இருக்க 40% பங்குகள உங்களுக்கு திருப்பித் தரேன். அது மட்டும் இல்ல, பார்ட்னர்ஷிப் ஆரம்பிக்க நீங்க முதலீடு பண்ண மொத்த தொகையும் நான் திருப்பி தரேன் “ என்று ஆர்யன் சொன்னதும், சந்திரசேகர் குழப்பத்துடன் அவனை பார்த்து, “ ஏன் அப்படி செய்ய தயாரா இருக்க ? “ என்று கேட்டார்.

” ரொம்ப சிம்பிள் சார், ஒரே ஒரு கண்டிஷன் தான். நீங்க மாயாவ நாட்ட விட்டே அனுப்பனும். என் பக்கத்துல, முக்கியமா என் மனைவி பக்கத்துல, அவள சுத்தி உங்க பொண்ணு இருக்குறத நான் விரும்பல “ என்று ஆர்யன் செக்மேட் வைத்தான். 

“ஆர்யன்…” என்று சந்திரசேகர் அதிர்ச்சியுடன் சொல்ல, “சார், நீங்க ஒன்னும் அவள மொத்தமா கைவிட போறதில்ல. உங்களுக்கு  வெளிநாட்டுல பிசினஸ் இருக்கு, அவ அத பார்த்துகிட்டு அங்கேயே தங்கலாம் “ என்று சொன்னான் ஆர்யன்.

சந்திரசேகர் ஒரு கணம் யோசித்து, “ சரி, எனக்கு சம்மதம் “ என்று   ஆமோதித்து தலையசைத்தார்.

அவர் சம்மதத்தை கேட்டதும், ” நல்லது, இப்பவே செட்டில் பண்ணிடலாம். உங்க பொண்ணு இன்னும் ரெண்டு நாளுக்குள்ள நாட்ட விட்டு போகணும் இல்லனா என்கிட்ட ஆதாரங்கள வெச்சு அவள கண்டிப்பா ஜெயிலுக்கு அனுப்புவேன் “ என்று ஆர்யன் உறுதியாக சொன்னான்.

சந்திரசேகர் கசப்பான புன்னகையை உதிர்த்து, “ சமீப காலமா நீ ரொம்ப புத்திசாலியா இருக்க ஆர்யன்.” என்று சொன்னார். அதற்கு ஆர்யன் புன்னகைத்தான். ” உங்க அனுபவமும் என்னோட அனுபவமும் கலந்தது சார் “ என்றான்.

கூட்டணியை கலைக்க ஆர்யனின் வழக்கறிஞர் ஏற்கனவே தயாரித்திருந்த ஆவணங்களில் கையெழுத்திட்டனர். பங்குகளை மீண்டும் சந்திரசேகருக்கு மாற்ற தேவையான ஆவணங்களில் பிரதீப் கையெழுத்திட்டான்.

” நீங்க 75 கோடி முதலீடு பண்ணீங்க, நீங்க எனக்கு தர வேண்டிய இழப்பீடு 100 கோடி. அதனால இப்போ நீங்க எனக்கு 25 கோடி மட்டும் கொடுத்தா போதும் “ என்று ஆர்யன் கூறினான்.

சந்திரசேகர் தன் உதவியாளரிடம் திரும்பினார். “ராஜேஷ், உடனே பேமெண்ட் ஏற்பாடு பண்ணு.” என்றார்.

ராஜேஷ் அவசர அவசரமாக வெளியே சென்று சிறிது நேரத்தில் அந்தத் தொகையுடன் திரும்பி வந்து ஆர்யனிடம் கொடுத்தான்.

சந்திரசேகர் எழுந்து நின்று, “எல்லாம் செட்டில் ஆயிடுச்சு ஆர்யன். நமக்குள்ள இனி எந்த உறவும் இல்ல, இன்னையோட எல்லாம் முடிஞ்சிடுச்சு “ என்று சொன்னார்.

ஆர்யன் தலையசைத்து, “ ஏற்கனவே நைட்டு ரொம்ப நேரமாயிடுச்சு அதனால பாதுகாப்பா போங்க சார். உங்க பொண்ண இங்க இருந்து அனுப்ப இன்னும் ரெண்டு நாள் அவகாசம் இருக்கு.” என்று கூறினான்.

மறுவார்த்தை பேசாமல் சந்திரசேகர் புறப்பட்டு சென்றார். தனது  சாம்ராஜ்யத்தை அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்ற தன் மகள் மீது கோபம் பொங்கியது.

*************************************

முன்னோட்டம்: 

“ஆர்யன் நம்ம பார்ட்னர்ஷிப்பை கேன்சல் பண்ணிட்டான். நான் பிசினஸ் சொல்லிக் கொடுத்த ஒருத்தன் கிட்ட நான் தோற்று போயிட்டேன். உனக்காகத் தான் அவன வளர விட்டேன். நேத்து என் வாழ்க்கையோட ரொம்ப மோசமான நாள். என்ன ஒரு பிச்சைக்காரன் மாதிரி நெனச்சு உன்னோட 40% பங்குகள திருப்பிக் கொடுத்தான். நான் திவாலான மாதிரி நான் முதலீடு பண்ண பணத்த என்கிட்ட திருப்பிக் கொடுத்தான். உன்னை ஜெயிலுக்கு அனுப்பாம இருக்க நான் அவனுக்கு அந்த இடத்திலேயே 25 கோடி பணம் கொடுக்க வேண்டியிருந்துச்சு “

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!